பதிவு செய்த நாள்
13
செப்
2017
05:09
தர்மபுரி: ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், சிறப்பு பூஜை மற்றும் அபிேஷகம் நடந்தது.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி நாளில், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி, நேர்த்திக்கடன் செலுத்தி, கோவிலை, 18 முறை சுற்றி வலம் வந்து, தட்சணகாசி காலபைரவரை தரிசனம் செய்வது வழக்கம்.
ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி நாளான இன்று(செப்13ல்) ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, காலை, 6:00 மணிக்கு காலபைரவருக்கு அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம், தனகார்சன குபேரயாகம், அதிருந்ர யாகம் உள்ளிட்ட யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிேஷகங்கள், 1,008 அர்ச்சனை மற்றும், 28 ஆகம பூஜைகள் நடந்தன. பின், மூலவருக்கு வெள்ளி கவச அலங்காரம் சாத்தப்பட்டு, காலை, 11:00 மணிக்கு மேல், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பகல், 12:00 மணிக்கு, உற்சவ தட்சணகாசி காலைபைரவர், கோவிலை சுற்றி, மூன்று முறை தேரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.