பதிவு செய்த நாள்
16
செப்
2017
06:09
கோவை: கோவையில், 108 திவ்ய தேச பெருமாள் தரிசனம் என்ற பெயரில் நடக்கும் இக்கண்காட்சியில் இந்தியா முழுவதும் உள்ள, 108 பெருமாள்களின் திரு உருவ சிலைகள் மற்றும் நில உலகில் பார்க்க முடியாத திருப்பரமபதம், திருப்பாற்கடல் ஆகியன அழகாக அலங்காரம் செய்யப்பட்டு அழகுற காட்சி அளிக்கிறது. இது பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது.
புரட்டாசி, மார்கழி இரண்டு மாதங்களும் பெருமாளுக்கு உகந்த மாதங்கள். அதிலும், புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து, பெருமாளை பக்தி சிரத்தையுடன் வழிபடுவதை வைணவ மக்கள் பெரும் பாக்கியமாக கருதுவர். அவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து ஆன்மிக பக்தர்களும், 108 பெருமாளையும் ஒரே இடத்தில் வழிபட ஏதுவாக இக்கண்காட்சி கோவை மேட்டுப்பாளையம் ரோடு, பி.எம்.என்., திருமண மண்டபத்தில் துவங்கியுள்ளது. இம்மாதம், 25 வரை நடக்கும் இந்த பெருமாள் தரிசன கண்காட்சி தினமும் காலை, 7:00 மணிக்கு துவங்கி, இரவு, 9:00 மணி வரை தொடர்ந்து நீடிக்கும். இக்கண்காட்சியில் நுழைந்தவுடன், முதல் பெருமாள் தரிசனமாக ஸ்ரீரங்கம் பள்ளி கொண்ட பெருமாள் நம்மை வரவேற்கிறார். தொடர்ந்து, 108 பெருமாள்களும் மலர் அலங்காரத்தில் காட்சி தருகிறார்கள். அதில், ஒவ்வொரு பெருமாளின் பெயர் மற்றும் அக்கோயில் இடம் பெற்றுள்ள மாநிலம், இடம் ஆகியன குறித்து விபரங்கள் உள்ளதால், அக்கோவிலுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு இத்தகவல் பெரிய உதவியாக இருக்கும். கண்காட்சியில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்ய வசதியும் உள்ளது. ஒரிஜனலாக இருக்கும் கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றால், அங்கு போட்டோ எடுக்க அனுமதி கிடையாது. ஆனால், இந்த பெருமாள் தரிசன கண்காட்சியில் மொபைல் போன், கேமராக்களில் படம் எடுக்க தாராளமாக அனுமதி வழங்கப்படுகிறது.