பதிவு செய்த நாள்
18
செப்
2017
12:09
மதுரா:உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில், ஆதரவற்ற, நோய்களால் பாதிக்கப்பட்ட, 1,200 பசுக்களை, ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண் பராமரித்து வருகிறார். உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள மதுராவில், ஜெர்மனியை சேர்ந்த, பெடரிக் இரினா பிரன்னிங், 59, கோ சாலையை நடத்தி வருகிறார். 1978ல் சுற்றுலா வந்த அவர், ஆன்மிகத்தின் மீது ஏற்பட்ட நாட்டத்தில், ஒரு பசுவை வளர்க்கத் துவங்கினார்.
அதன்பின், ஆதரவற்ற, நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பால் சுரப்பதை நிறுத்திய பசுக்களை பராமரிக்கத் துவங்கினார். சுதேவி மாதாஜி என, மதுரா மக்களால் அன்புடன் அழைக்கப்படும் பிரன்னிங், தன் சிறிய கோ சாலையில், 1,200 பசுக்களை பராமரித்து வருகிறார். அவரது தந்தை, நம் நாட்டில் உள்ள ஜெர்மன் துாதரகத்தில் பணியாற்றியவர். ஜெர்மனியில் உள்ள சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வாடகையை பயன்படுத்தி, கோ சாலையை நிர்வகித்து வருகிறார், சுதேவி மாதாஜி. அந்த வருமானத்தை இழக்கக் கூடாது என்பதற்காக இதுவரை, இந்தியக் குடியுரிமையை அவர் கோரவில்லை. இது குறித்து அவர் கூறியதாவது: இந்த சிறிய இடத்தில் அதிக மாடுகளை பராமரிக்க முடியவில்லை. இருப்பினும் சமாளித்து வருகிறேன். மருந்து, உணவு, ஊழியர் சம்பளம் என, மாடுகள் பராமரிப்புக்கு, மாதத்துக்கு, 22 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதுவரை சொந்த செலவில் செய்து வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.