பதிவு செய்த நாள்
18
செப்
2017
12:09
ஆர்.கே.பேட்டை : ஆடியில் துவங்கிய அம்மன் கோவில் திருவிழா ஆவணி மாதத்தில் நிறைவடைந்தது. எட்டு வாரம் நடந்த கொண்டாட்டத்தின்நிறைவாக, ஜாத்திரை உற்சவத்தின் போது, பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து வலம் வந்தனர். ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழா களைகட்டும். அதை தொடர்ந்து ஆவணி மாதத்தில், கிராம தேவதையான அம்மன் கோவில்களில் ஜாத்திரை திருவிழா நடக்கும். கடந்த எட்டு வாரங்களாக, ஆர்.கே.பேட்டை, வங்கனுார், அத்திமாஞ்சேரிபேட்டை, பொதட்டூர்பேட்டை, ஸ்ரீகாளிகாபுரம், ராஜாநகரம், கிருஷ்ணாகுப்பம் உள்ளிட்டசுற்றுவட்டார கிராமங்களில் களைகட்டிய உற்சவங்கள் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. நிறைவு நாள் உற்சவத்தில், அம்மன் வீதியுலா நடந்தது. இதில், பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாக, பார்வதி, பரமசிவன், அகத்தியர், முருகன், விநாயகர், குறத்தி வள்ளி, நாரதர் என பல்வேறு வேடம் அணிந்து வலம் வந்தனர்.
ஆடி மாதத்தில், செவ்வாய், வெள்ளிக்கிழமையில் மட்டும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்து வந்தது. ஆவணியில், மூன்று மற்றும் நான்காம் வாரம் என தொடர்ந்து பத்து நாட்களுக்கும் மேலாக, தினசரி பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா எழுந்தருளினார். கடந்த செவ்வாய் கிழமை அம்மையார்குப்பத்திலும், புதன் கிழமை பொதட்டூர்பேட்டையிலும், வியாழக்கிழமை சொரக்காய்பேட்டையிலும், அம்மனுக்கு கும்பம் படைக்கப்பட்டது. ஜாத்திரை திருவிழாவை ஒட்டி, ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகள், அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பலியிடப்பட்டன.