பதிவு செய்த நாள்
19
செப்
2017
10:09
நாகர்கோவில்: வரும் 21ம் தேதி தொடங்க உள்ள நவராத்திரி பூஜைக்காக, சரஸ்வதிதேவி மற்றும் சுவாமி சிலைகள் யானை மீது ஊர்வலமாக கொண்டு செல்லப்ட்டன. இதில் கேரள அமைச்சர்கள் பங்கேற்றனர்.மன்னர் ஆட்சி காலத்தில்திருவிதாங்கூர் ராஜ்யத்தின் தலைநகராக கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்மனாபபுரம் விளங்கியது. இங்குள்ள அரண்மனை வளாகத்தில் தேவாரகெட்டு சரஸ்வதி கோயில் உள்ளது. இது கவியரசர் கம்பர் வழிபட்ட சரஸ்வதிதேவி சிலை என்று வரலாறு கூறுகிறது. மன்னர்கள் காலத்தில் இக்கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பின்னர் நிர்வாக வசதிக்காக 1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மன்னர் காலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது.அதன் பின்னரும் நவராத்திரி விழா தடையின்றி நடப்பதற்காக மன்னர் உத்தரவு படி சரஸ்வதிதேவி சிலை யானைமீது பவனியாக திருவனந்தபுரம் எடுத்து செல்லப்பட்டது. மன்னர் ஆட்சி மறைந்த பின்னரும், அந்த மரபு மறக்கப்படாமல் தொடர்கிறது.
இந்த விழா இருமாநிலங்களை இணைக்கும் விழாவாக நடைபெற்று வருகிறது. வரும் 21- ம் தேதி நவராத்திரி பூஜை தொடங்குவதை முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணிக்கு பத்னாபபுரத்தில் இருந்து நவராத்திரி பவனி புறப்பட்டது. யானை மீது சரஸ்வதி அம்மனும், பல்லக்குகளில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் எடுத்து செல்லப்பட்டன. யானை மீது சரஸ்வதி அம்மன் சிலை ஏற்றப்பட்ட போது கேரள போலீசாரின் பேன்ட் வாத்யம் முழங்க, போலீசார் துப்பாக்கியை வானை நோக்கி பிடித்து மரியாதை செலுத்தினர்.முன்னதாக காலை 7:05 மணிக்கு மன்னரின் உடைவாள் எடுத்து கொடுக்கும் நிகழ்ச்சி அரண்மனை உப்பரிகை மாளிகையில் நடந்தது. கேரள தொல்பொருள் துறை அமைச்சர் ராமச்சந்திரன், தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் வாளை எடுத்து குமரி மாவட்ட தேவசம்போர்டு இணை ஆணையர் அன்புமணியிடம் கொடுத்தனர். இந்த வாள் ஊர்வலத்தின் முன்னால் எடுத்து செல்லப்பட்டது.நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன், எம்.பி.,க்கள் நடிகர் சுரேஷ்கோபி, விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நேற்று குழித்துறையில் தங்கிய பவனி, இன்று காலை மாநில எல்லையான களியக்காவிளை வந்ததும், கேரள அரசு சார்பில் வரவேற்பு வழங்கப்படும். இன்று நெய்யாற்றின்கரையில் தங்கும் பவனி, நாளை திருவனந்தபுரம் செல்லும் போது, அங்கு திருவிதாங்கூர் அரண்மனை சார்பில் வரவேற்பு கொடுக்கப்படும். 21-ம் தேதி நவராத்திரி பூஜை தொடங்கும்.