பதிவு செய்த நாள்
19
செப்
2017
11:09
ஒகேனக்கல்: மகா புஷ்கரத்தை முன்னிட்டு, ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையில் நேற்று யாகம் வளர்த்து, பல்வேறு பூஜைகள் நடத்தி, பக்தர்கள் புனித நீராடினர். தமிழகம் முழுவதும் உள்ள காவிரி ஆற்றங்கரையோரம், மகா புஷ்கரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று, தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில், புஷ்கர விழா, அகில பாரத துறவியர் சங்கத் தலைவர், சுவாமி ராமானந்தா தலைமையில் நடந்தது.
சிறப்பு பூஜை : தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஒகேனக்கல் காவிரியில் குவிந்தனர். இவர்கள், குடும்பத்தோடு ஆற்றில் புனித நீராடினர். பல்வேறு பகுதிகளில் இருந்து, கொண்டு வரப்பட்ட சுவாமி சிலைகளையும் புனித நீராடச் செய்து, காவிரி தாய்க்கு வழிபாடு செய்த பின், ஊர்வலமாக எடுத்து சென்று, தேவநாதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர்.
சாதுக்கள் பங்கேற்பு : விழாவில், காவிரி பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் அம்சராஜ், காளீஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் உட்பட, சாதுக்கள், ஆஸ்ரம நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர். விழா கமிட்டியினர் கூறுகையில், ’தமிழகம் முழுவதும், மகா புஷ்கரம் விழாவுக்கு, சிறப்பான முறையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு எந்தவித ஏற்பாடுகளும் செய்யவில்லை. ஆற்றுப் படுகைகளில், பாதுகாப்பான முறையில், நீராடக்கூட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை’ என்றனர்.
கும்பகோணம் வந்த காவிரிக்கு வரவேற்பு : பக்தர்கள் புனித நீராடுவதற்காக, 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து, 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர், 15ம் தேதி கல்லணைக்கு வந்தது. அங்கிருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று காலை கும்பகோணம் வந்தது. பொதுமக்கள், இந்து அமைப்பினர், ஆன்மிக அமைப்பினர், ஆரத்தி எடுத்தும், பால் ஊற்றியும், காவிரித் தாய்க்கு, மங்கள பொருட்களை வழங்கியும், வரவேற்றனர். ’காவிரியில் தண்ணீர் வருவதால், புஷ்கரத்தை முன்னிட்டு, புனித நீராடுபவர்களின் எண்ணிக்கை இன்று முதல் அதிகரிக்கும்’ என, தென்பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை அமைப்பினர் தெரிவித்தனர்.
புனித நீராடிய ரவிசங்கர் : ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையில், காவிரி புஷ்கர விழா நடந்து வருகிறது. வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், நேற்று புனித நீராட, ஹெலிகாப்டரில் வந்தார். காவிரி ஆற்றில் பால், சந்தனம், புனித தீர்த்தம் ஊற்றி வழிபட்டு புனித நீராடினார். பின், சங்கமேஸ்வரர் கோவில், வேதநாயகி அம்மன் கோவில், பெருமாள் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தார்.
அவர் கூறியதாவது: நாட்டுக்கு மிக முக்கியமானது நீர் தான். காவிரி புஷ்கர விழா நடக்கும் வேளையில், பிரசித்தி பெற்ற கூடுதுறையில் புனித நீராடி, சங்கமேஸ்வர சுவாமியை வழிபட வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.