பதிவு செய்த நாள்
20
செப்
2017
11:09
போடி: போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்தர்களால் கட்டப்பட்ட ஸ்ரீ கயிலாய கீழச்சொக்கநாதர் கோயில் உள்ளது. நேற்று புரட்டாசி சர்வ மகாளய அமாவாசையைமுன்னிட்டு,சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
* மேலச்சொக்கநாதர் கோயில், பரமசிவன் கோயில், போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், சுப்பிரமணியர் கோயில், வினோபாஜிகாலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சுருளி அருவி: மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று சுருளி அருவியில் ஏராளமானோர் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இங்கு அதிகாலை முதல் மக்களின் கூட்டம் வரத்துவங்கியது. அருவியில் குளித்தபின் சுருளி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பின்னர் பூதநாராயணர் கோயில், வேலப்பர் கோயில் மற்றும் ஆதிஅண்ணாமலையார் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். ஆதி அண்ணாமலையார் கோயிலில் பூஜைகளை சிவனடியார் முருகன் சுவாமிகள் நடத்தினார். அன்னதானம் வழங்கப்பட்டது. உத்தமபாளையம் டி.எஸ்.பி., அண்ணாமலை தலைமையிலான போலீஸ் குழு, கிழக்கு ரேஞ்சர் விக்னேஸ் தலைமையிலான வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.