பதிவு செய்த நாள்
21
செப்
2017
12:09
தேனி: தேனியில் மக்கள் தங்களது வீட்டில் நவராத்திரி கொலுவில் பொம்மைகள், கடவுள் சிலைகள் வைத்து அலங்கரித்து வருகின்றனர். தேனியில் பல்வேறு பகுதி வீடுகளில் நவராத்தி கொலுவிற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். பல வீடுகளில் அவை வைக்கப்பட்டுள்ளன. உலகத்தின் புல்பூண்டில் இருந்து தெய்வநிலைக்கு செல்லும் இடமாக 11படிகள் அமைத்து சிறிய விளையாட்டு பொம்மைகள், மரபாச்சி பொம்மைகள், நவதானியங்கள், கடவுள் சிலைகள் என படிகளில் அலங்கரிக்கப்படுகிறது. இன்று முதல் நாள் கலசம் வைத்து நவராத்திரி துவங்குகிறது. 3 நாட்கள் துர்கை அம்மனுக்கும் பூஜைகள் நடத்தப்படும், அடுத்த 3 நாட்கள் லட்சுமிக்கு பூஜைகள் நடக்கும். அதற்கடுத்த 3 நாட்கள் சரஸ்வதிக்கு பூஜை நடக்கும். இதில் பக்கத்து வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடவுள் வழிபாடு நடக்கும். இதன் மூலம் கடவுள் தங்களின் வீட்டிற்கு வந்து அருள் தருவார் என்பது ஐதீகமாக உள்ளது.
பரிசு: தொடர்ந்து 41 ஆண்டுகளாக கொலு வைத்து வரும் தேனியை சேர்ந்த சுகுமார் கூறியதாவது: 1976 முதல் எங்கள் வீட்டில் கொலு வைத்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் புதிய பொம்மைகள் கடவுள் சிலைகள் வாங்கி வருகிறோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் சேகரித்து வைத்துள்ளோம். காசி, ராமே ஸ்வரம், காஷ்மீர், மதுரை, ஒடிசா போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்கையில் கொலு பொம்மைகள் வாங்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளோம். காலை 2 மணி நேரம், மாலை 4 மணி நேரம் பூஜை செய்வோம். பூஜையில் கலந்து கொள்வோருக்கு சுண்டல், பொங்கல் போன்றவைகள் பிரசாதமாக கொடுக்கப்படும். பென்சில்,தட்டு, கிண்ணம் போன்ற சிறிய பாத்திரம், வளையல் என பரிசு பொருட்களும் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம்,’’என்றார்.