பதிவு செய்த நாள்
22
செப்
2017
11:09
துாத்துக்குடி: குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே, கடற்கரை கிராமம் குலசேகரன்பட்டினத்தில், ஆண்டு தோறும் நடக்கும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இங்குள்ள, ஞானமூர்த்தீசுவரர், முத்தாரம்மன் கோவிலில், தசராவில் பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவர். கடவுளர் வேடம் அணிந்தும், தாங்கள் விரும்பும் பல்வேறு வேடங்கள் அணிந்தும், மக்களிடம் காணிக்கை பெற்று, அதை கோவில் உண்டியலில் செலுத்துகின்றனர். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா, நேற்று காலை, கொடியேற்றத் துடன் துவங்கியது. நேற்று காலை, அலங்கரிக் கப்பட்ட யானையின் மீது, கொடிப்பட்ட ஊர்வலம், முக்கிய வீதிகளின் வழியாக, கோவிலை வந்தடைந்தது. சுவாமி,- அம்பாளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் காப்புக்கயிறு கட்டி, விரதம் துவக்கினர். விழா நாட்களில், தினமும், சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகமும், இரவில், வீதி உலாவும் நடக்கும். 10-ம் திருநாளான, வரும் 30ம் தேதி நள்ளிரவு, 12:00 மணிக்கு, சிறப்பு பூஜையுடன், முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, குலசேகரப்பட்டினம் கடற்கரைக்கு செல்வார். அங்கு, மகிஷாசுரனை சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.