பதிவு செய்த நாள்
22
செப்
2017
11:09
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா துவக்க நாளான நேற்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஓதுவார் பயிற்சிப்பள்ளி மாணவர்களின் திருமுறை இன்னிசையுடன் நேற்று காலை 9:00 மணிக்கு நவராத்திரி விழா துவங்கியது. உற்ஸவ நாட்களான செப்.,29 வரை தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை மீனாட்சி அம்மன், மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பூஜை, சகஸ்ரநாம பூஜை, சிறப்பு பூஜைகள் நடக்கும். பூஜை காலத்தில் பக்தர்களுக்கு தேங்காய் உடைத்தல், அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்பட மாட்டாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும், அலங்கார அம்மனுக்கு மட்டுமே தேங்காய் உடைப்பு, அர்ச்சனைகள் நடக்கும்.
ராஜராஜேஸ்வரி அலங்காரம் : நவராத்திரி விழா துவக்க நாளான நேற்று இரவு 7:00 மணிக்கு கொலு மண்டபத்தில் ரோஸ் நிற பட்டுடுத்தி, தாமரை மொட்டு, ஏலக்காய், மல்லிகை மாலை அணிந்து, இடது கையில் வெள்ளிக்கரும்பு ஏந்தி, ருத்ராட்ச முத்து கிரீடம், வைர தாலி, பவளத்தாடம், பொட்டுக்காரை சாத்துபடியாகி சர்வ அலங்காரத்தில் ராஜராஜேஸ்வரியாக அம்மன் எழுந்தருளினார்.
சிவபெருமை பேசும் கொலு : கோயில் சார்பில் கொலுமண்டபத்தில் நவராத்திரி கொலு அலங்காரம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21 அரங்குகள் அமைக்கப்பட்டு அற்புதம் வென்ற கற்பகக் கனியான், முப்பெரும் தேவியர், அம்பலத்தாடுவான் அருங்காட்சி, திருமால் எடுத்த திருக்கோலங்கள், கலைமகள், இருமை நல்கும் அட்ட லட்சுமிகள், சங்கப்பலகை சங்கரன் அளித்தல், திருவிளையாடல் புராணம், குண்டோதரன் பரிப்பணி தீர்த்தல் என கொலு கண்காட்சியில் தனித்தனியாக இடம் பெற்றிருந்தன. இம்முறை சிவபெருமான் பெருமையை பேசும் விதத்தில் கொலு கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நாளான இன்று (செப்.,22) இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் அலங்காரம் நடக்கிறது. தினமும் மாலை 6:00 மணி முதல் அம்மன் அலங்காரத்துடன் கொலு பார்க்கலாம். தவிர, தினமும் காலை முதல் கொலு கண்காட்சியை பார்க்கலாம். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.