பதிவு செய்த நாள்
22
செப்
2017
11:09
பழநி: புரட்டாசி பிரம்மோற்ஸவ விழாவிற்காக, பழநி புஷ்ப கைங்கர்யா சபா மூலம் திருப்பதிக்கு 10 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. பழநி புஷ்ப கைங்கர்யா சபா மூலம் திண்டுக்கல், நிலக்கோட்டை, திருச்சி பகுதிகளில் இருந்து பூக்களை சேகரித்து, ஆண்டுதோறும் திருப்பதியில் நடைபெறும் புரட்டாசி, பிரம்மோற்ஸவ விழாவிற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தாண்டு பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிகப்பட்ட 700 கிலோ பூக்களை பழநி மாரியம்மன் கோயிலில் இருந்து திருப்பதிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) மேனகா மற்றும் சபா நிர்வாகிகள் ஹரிஹரமுத்து, மருதசாமி உட்பட பலர் பங்கேற்றனர். மருதசாமி கூறுகையில்,“15 ஆண்டுகளாக திருப்பதி பிரம்மோற்ஸவ விழாவிற்கு டன் கணக்கில் பூக்களை அனுப்புகிறோம். இந்த ஆண்டில் முதற்கட்டமாக துளசி, வாடாமல்லி, மரிக்கொழுந்து, செண்டுமல்லி, தாமரை, சம்பங்கி பூக்களை அனுப்பி வைக்கிறோம். தொடர்ந்து பூக்களை சேகரித்து பிரம்மோற்ஸவத்தின் பத்து நாட்களுக்கும் 10 டன் பூக்களை அனுப்ப உள்ளோம்” என்றார். திருப்பதிக்கு பூக்களை அனுப்பவிரும்புவோர் 94434- 03026 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.