நாளை மதுரை மீனாட்சியம்மன் ஞானப்பால் அருளியது அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள். ஞானசம்பந்தர் மூன்று வயது பாலகனாக இருந்த போது, அவரது தந்தை சிவபாத இருதயர் சீர்காழி தோணியப்பர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். கோயில் குளக்கரையில் அமர வைத்து விட்டு நீராடக் கிளம்பினார். நீண்ட நேரமானதால் பசியால் வாடிய சம்பந்தர் அழுதார். அவருக்குப் பாலுாட்ட சிவன், பார்வதி அங்கு வந்தனர். சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டி விட்டு மறைந்தனர். கரையேறிய சிவபாத இருதயர், பால் சிந்திய வாயோடு நின்ற சம்பந்தரைக் கண்டு, ’உனக்குப் பாலுாட்டியது யார் ?’ எனக் கோபித்தார். அப்போது சம்பந்தர், ’தோடுடைய செவியன்....’ என்று தேவாரம் பாடினார். அம்மையப்பராக ரிஷப வாகனத்தில் சிவபார்வதி மீண்டும் காட்சியளித்தனர். இதை தரிசித்தால் நல்ல புத்தி, நிம்மதி உண்டாகும்.
நைவேத்யம்: கோதுமை பொங்கல், சர்க்கரைப் பொங்கல்
பாட வேண்டிய பாடல்: பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையாள் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே.