பதிவு செய்த நாள்
22
செப்
2017
12:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பச்சை மரகத நடராஜர் சிலை மற்றும் ஐந்து ஐம்பொன் சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர். ஏழு பேரை கைது செய்தனர்.
திருவண்ணாமலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையில், எஸ்.பி., பொன்னி உள்ளிட்ட, 10 பேர் கொண்ட போலீஸ் குழுவினர், நேற்று தீவிர விசாரணை நடத்தினர். சிலை கடத்தல் விற்பனை கும்பலை சேர்ந்தவர்களிடம், சிலை வாங்குபவர்கள் போல் நடித்து, அந்த கும்பலை தொடர்பு கொண்டு, கிரிவலப்பாதையில் எமலிங்கம் அருகே வரவழைத்து பேசினர். இதில், சிலை கடத்தல் கும்பலை சேர்ந்த நித்யானந்தம், 34, முருகன், 29, ஷ்யாம்சுந்தர், 47,பால்ராஜ், 49, செந்தில்குமார், 33, மூர்த்தி, 45, திவ்யநாதன், 60, ஆகிய, ஏழு பேர் கொண்ட கும்பல், போலீசாரிடம், பச்சை மரகத நடராஜர் சிலை மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள, ஐந்து ஐம்பொன் சிலை உட்பட, ஆறு சிலைகளை காண்பித்து, விலை பேசினர். அப்போது, போலீசார் அவர்களை மடக்கி பிடித்து, சிலைகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலையில், ஏழு பேர் கொண்ட சிலை கடத்தல் விற்பனை கும்பலை சேர்ந்தவர்களிடம், சிலை வாங்குவது போல், 10 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் சென்று, சிலைகளை பார்த்து, அவற்றின் விலை விசாரித்தனர். பச்சை மரகத நடராஜர் சிலை மற்றும், ஐந்து ஐம்பொன் சிலைகளை காண்பித்தனர். இதில், பச்சை மரகத நடராஜர் சிலைக்கு மட்டும், ஏழு கோடி ரூபாய் கேட்டனர். அந்த நேரத்தில், அவர்களை சுற்றி வளைத்து, ஏழு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த சிலைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சிலைகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை. இவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின், சிலைகளின் முழு மதிப்பு தெரியவரும். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும், மாநிலம் முழுவதும் சிலை கடத்தி விற்பனை செய்தல் தொடர்பாக, 360 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.