’ஆன் லைனில்’ தீர்த்த டிக்கெட் : ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் நடவடிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2017 12:09
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் புனித நீராட ஆன் லைனில் தீர்த்த டிக்கெட் விற்க நடவடிக்கை எடுக்கப்படும், என இந்து அறநிலைதுறை ஆணையர் ஜெயா தெரிவித்தார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த இந்து அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, கூறியதாவது: கோயில் சார்பில் ’யாத்திரை நிவாஸ்’ எனும் தங்கும் விடுதி கட்டப்படுகிறது. இதுதவிர கோயில் அருகில் உள்ள விடுதிகள் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து புதுப்பிக்கவோ, புதிய விடுதி கட்ட முடிவு செய்யப்படும். ராமேஸ்வரத்தில் ’ராமாயண சர்க்யூட்’ எனும் தங்கும் விடுதி கட்டப்படும். கோயிலில் முழுமை பெறாமல் உள்ள 2ம் பிரகாரம் கட்டுமான பணி துவக்கவும், பிரகாரத்தில் சேதமடைந்த துாண்கள் பழமை மாறாமல், தொல்லியல் துறை ஆலோசனையுடன் புதுப்பிக்கப்படும். இக்கோயிலில் புனித நீராட ’ஆன் லைனில்’ தீர்த்த டிக்கெட் விற்க உள்ளதால், பக்தர்கள் தீர்த்த டிக்கெட்டுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கோயிலில் சேதமடைந்த தங்க தேருக்கு பதிலாக புதிய தங்க தேர் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
தீர்த்தம் அசுத்தம்: கண்டிப்பு கோயிலுக்குள் அனைத்து தீர்த்த கிணற்றிலும் காலி குடிநீர் பாட்டில்கள், பாலிதீன் பைகள் குவிந்து கிடந்ததை கண்ட ஆணையர் ஜெயா, கோயில் அதிகாரிகளை கண்டித்தார். பின், கோயில் நடை சாத்தியதும் கோயிலுக்குள் செக்யூரிட்டி காவலர்கள் ஆய்வு செய்து பிறகு கதவு பூட்ட வேண்டும், என தெரிவித்தார்.