பதிவு செய்த நாள்
22
செப்
2017
03:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீப திருவிழா, பந்தக்கால் முகூர்த்தம், அக்.,1ல் நடக்கிறது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் கார்த்திகை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, பல லட்சம் பக்தர்கள் வருவர். நடப்பாண்டு விழா, நவ.,23ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து டிச.,2ல், அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக, தீப திருவிழா பூர்வாங்க பணி தொடங்க, வரும் அக்.,1ல் காலை, 7:30 மணி முதல், 9:00 மணிக்குள், நான்கு கால் மண்டபம் அருகில் பந்தக்கால் முகூர்த்தம் நடக்க உள்ளது.
இதையடுத்து தீப விழாவில், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வாகனம், பஞ்ச மூர்த்திகள் தேர், மகா தீபம் ஏற்ற நெய் கொள்முதல், திருவிழா பத்திரிகை அடித்தல் உள்ளிட்ட பணிகள், வெளியூர் பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்யும் வேலைகளும் தொடங்கப்படும். இந்நிலையில், கார்த்திகை தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த, முதல் கட்ட ஆலோசனை கூட்டம், கலெக்டர் கந்தசாமி தலைமையில், திருவண்ணாமலையில் நேற்று நடந்தது. இதில், காவல், மின்சாரம், பொதுப்பணி, வருவாய்த்துறைகள், நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளில் செய்ய வேண்டிய, பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.