பதிவு செய்த நாள்
23
செப்
2017
12:09
இந்துக்களின் பண்டிகையான நவராத்திரி விழா, முப்பெரும் தேவியரை போற்றும் விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில், நவராத்திரி என்றும், மற்ற மாநிலத்தில், தசரா, துர்கா பூஜை என்ற பெயரிலும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்கள் நடக்கும் இந்த விழா, முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வணங்கி வழிபாடு செய்கின்றனர்.ஆண்டுதோறும், புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த நாள் நவராத்திரி விழா துவங்கி சிறப்பாக நடக்கும். இந்தாண்டும், நவராத்திரி விழா துவங்கப்பட்டு, மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
கொலு பொம்மை: நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள் மற்றும் வீடுகளில், ஏழு மற்றும் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, கடவுளின் சிலைகள், தியாகிகள், வணிகர்கள் வியாபாரம் செய்தல், வனவிலங்குகள் என பலவிதமான பொம்மைகள் அடுக்கப்படும். ஒவ்வொரு அடுக்கிலும் விதம் விதமான சிலைகள், அடுக்கப்பட்டு பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அதன் பின், ’சீரியல் பல்புகள்’ பொருத்தப்பட்டு, அழகாய் அலங்கரிக்கப்படும். ஒரு சிலர் வீடுகளில், கொலு பொம்மைகள் வைத்துள்ள பகுதியில், பூங்காக்களும் அமைத்து, அழகாய் பலர் வடிவமைப்பர்.
பிரசாதம்: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரசாதங்கள் தயாரித்து, அம்மனுக்கு படைக்கப்படும். பெண்கள், குழந்தைகளுக்கு அம்மன் அலங்காரம் செய்தும் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். மேலும், அம்மன் பாடல்களை பாடியும், அண்டை வீட்டார்களை அழைத்து, பிரசாதம் வழங்கியும் மகிழ்வுடன் ஒன்பது நாட்களும் கொண்டாடுகின்றனர்.
கோவில்களில் வழிபாடு: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், நவராத்திரி விழாவையொட்டி, சிறப்பு பூஜைகளும், சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடக்கிறது. கோவில்களில், ஒவ்வொரு நாளும், அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவையொட்டி, சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
திருவிழா கோலம்: அண்டை வீட்டாருடன் நட்பு பாராட்டி, அவர்களையும் அழைத்து, விழாவை கொண்டாடுவதால், இந்த விழா, ஒற்றுமையை பலப்படுத்தும் விழாவாகவும் கருதப்படுகிறது. ஒன்பது நாட்களும், கோவில்களும், வீடுகளும் திருவிழா கோலம் பூண்டிருக்கும். கொலு பொம்மை வைத்து வழிபாடு செய்வதால், பொம்மை தயாரிப்பவர்களும் விற்பனை செய்து, வருமானம் ஈட்ட முடியும். இதுபோல பல நன்மைகளை அளிக்கும் இந்த நவராத்திரி விழாவை அனைவரும் கொண்டாடி மகிழ்வோம்.