பதிவு செய்த நாள்
23
செப்
2017
01:09
மதுரை: ‘ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சில தீர்த்தங்களை, தகுந்த இடத்திற்கு மாற்றுவது குறித்து, அறநிலையத்துறை முடிவெடுக்க வேண்டும்’ என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கோவை வழக்கறிஞர் வெண்ணிலா தாக்கல் செய்த மனுவில், ‘ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் அக்னி தீர்த்த பகுதியில் கழிவு நீர் கலக்கிறது. அதை தடுத்து, கோவிலை துாய்மையாக பராமரிக்க வேண்டும். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய, அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தார். நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது. அறநிலையத்துறை கமிஷனர், ராமேஸ்வரம் கோவில் இணை கமிஷனர் ஆஜராகினர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: கோவிலில், ஒன்று முதல், ஆறு வரையிலான தீர்த்தங்களை, தகுந்த இடத்திற்கு மாற்ற, சிருங்கேரி சாரதா பீடம் சங்கராச்சாரியாரிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதற்குரிய திட்டம், அறநிலையத்துறை கமிஷனரிடம் உள்ளது. அவர் பக்தர்களின் நலன் கருதி, இரண்டு வாரங்களில் தகுந்த முடிவெடுக்க வேண்டும். கோவிலில் உள்ள பேட்டரி கார்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை பழுது நீக்கம் செய்ய வேண்டும் அல்லது புதிய பேட்டரி கார்கள் வாங்க முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், இறுதி தீர்ப்பை ஒத்திவைத்தனர்.