பழநியில் 2வது ரோப்காருக்கு பூஜை : பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2017 11:09
பழந: பழநி முருகன் மலைக்கோயிலில் சிறப்பு பூஜை செய்து இரண்டாவது ரோப்கார் ரூ.72கோடி மதிப்பீட்டில் அமைக்க பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பழநி மலைக்கோயில் ரோப்கார் ஸ்டேஷன் அருகிலேயே இரண்டாம் ரோப்கார் நிறுவ இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு நவீன தொழில்நுட்பத்துடன் அமைப்பதற்காக 11 பேர் கொண்ட ரோப்கார் கமிட்டி உள்ளது. 2வது ரோப்கார் அமைப்பதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்டது. இதில், பிரான்சை சேர்ந்த போமா ரோப்வே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய ரோப்கார் கமிட்டி முடிவு செய்தது. அதன்படி கடந்த ஜூலையில் பிரான்ஸ் நிறுவனத்தின் சார்பில், சென்னை தனியார் நிறுவன தலைமைப்பொறியாளர் வெங்கடாசலம் குழுவினர் பழநி வந்தனர். ரோப்கார் கமிட்டியிலுள்ள பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், பொறியாளர்கள் ஆகியோருடன் இரண்டாவது ரோப்கார் அமைய உள்ள கீழ்தளம் மற்றும் மேல்தளம் ஆய்வு செய்யப்பட்டது. ரூ.72கோடி மதிப்பீட்டில் இரண்டாவது ரோப்கார் நவீன தொழில்நுட்பத்தில் அமைகிறது.
ஒரு பெட்டியில் 15 முதல் 20 பேர் பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நேற்று முன்தினம் (செப்.23) மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜையில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் 2வது ரோப்கார் அமைக்க கோயில் நிர்வாகத்துக்கும், பிரான்ஸ் நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் ஒப்பந்தம் கையொப்பம் ஆகியுள்ளது. இணை ஆணையர் செல்வராஜ் கூறியதாவது: முதல் ரோப்கார் அருகிலேயே இரண்டாவது ரோப்கார் அமைக்கப்படுகிறது. இதற்காக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அனுமதியுடன், பிரான்ஸ் நிறுவனத்தின் அனுமதி பெற்ற சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். விரைவில் 2வது ரோப்கார் பணிகள் துவங்க உள்ளது என்றார்.