பதிவு செய்த நாள்
25
செப்
2017
11:09
சென்னை: நவராத்திரி கோவிலில், 4,000 கொலு பொம்மைகளுடன், வித்தியாசமான கொலு வைக்கப்பட்டு உள்ளது. சென்னை, கொளத்துார், ஜி.கே.எம்., காலனியில், நவராத்திரி கோவில் உள்ளது. இங்கு, லட்சுமி, சக்தி, சரஸ்வதி ஆகியோர், மூலவராக உள்ளனர். இக்கோவிலில், மூன்றாவது ஆண்டாக, நவராத்திரி கொலு மற்றும் கலை விழா கொண்டாட்டம் துவங்கி உள்ளது. கடந்த, 21ம் தேதி துவங்கிய, கொலு கண்காட்சி, 10 நாட்கள் நடைபெற உள்ளன. இதில், விவசாயத்தின் அருமையை உணர்த்தும் கொலு, அறுபடை வீடு, கிருஷ்ணரின் லீலை, உழைப்பின் பெருமை, சிவன் தலையில் இருந்து தண்ணீர் வருவது போன்ற பொம்மை உள்ளிட்ட, 4,000 பொம்மைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளன.
கும்பகோணம், தஞ்சாவூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, பெங்களூரு, மைசூரு போன்ற நகரங்களிலிருந்தும், துபாய், தாய்லாந்து, எகிப்து போன்ற நாடுகளிலிருந்தும், இந்த பொம்மைகள் கொண்டு வரப்பட்டு, கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பத்து நாட்கள் நடைபெறும் இந்த கொலு நிகழ்ச்சியில், பரதநாட்டியம், சொற்பொழிவு, பாட்டு மன்றம், கிராமிய நடனம், பட்டிமன்றம் உட்பட, பல்வேறு கலை நிகழ்ச்சிகள், தினமும் நடைபெற உள்ளன. மேலும், சாய் பாபாவிற்கு பாலாபிஷேகம், கணபதி சிலைக்கு சர்வாபிஷேகம், வராஹி அம்மனுக்கு சர்வாபிஷேகம், முப்பெரும் தேவியருக்கு குங்கும அர்ச்சனை என, கொலு கண்காட்சி நடைபெறும் என, விழாக்குழுவினர் கூறினர். - நமது நிருபர் -