பதிவு செய்த நாள்
25
செப்
2017
12:09
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் தேகளீச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு மூலஸ்தானத்தில் திருவிக்ரமன் விஸ்வரூபதரிசனம், 5:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, காலை 7:30 மணிக்கு நித்யதிருவாராதனை நடந்தது.
காலை 9:00 மணிக்கு ஸ்ரீ தேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் கண்ணாடி அறை மண்டபத்தில் எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம், பகல் 12:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில், திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து திருப்பாவாடை தளிகை படையலிட்டு, மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 8:30 மணிக்கு சேவை சாற்றுமறை, 9:30 மணிக்கு சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த இவ்விழாவில், தொழில் அதிபர்கள் கார்த்திகேயன் சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருத்தேர் உற்சவம்: மேல்தாங்கல் திருவத்திமலை வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி தேர் பவனி நடந்தது. செஞ்சி தாலுகா, மேல்தாங்கல் திருவத்திமலை ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி உற்சவ விழா நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 20ம் தேதி கருடக்கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மறுநாள் பெரிய திருவடி எனும் கருடசேவை உற்சவமும், 22ம் தேதி சாமி கோவில் உலாவும், பட்டி மன்றமும் நடந்தது. நேற்று காலை புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதிக்கு சிறப்பு திருமஞ்சனமும், காலை 10:00 மணிக்கு சிறப்பு பஜனையும், 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில் திருத்தேர் பவனியும் நடந்தது. மாலை மேல்தாங்கல் கிராமத்தில் சாமி வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வெங்கடாஜலபதி திருக்கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.