பதிவு செய்த நாள்
03
அக்
2017
10:10
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் துாய்மைப் பணிக்கு கோயில் சார்பில் ஆண்டு தோறும் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வருகிறது.மத்திய அரசின் துாய்மை இந்தியா இயக்க திட்டத்தின் கீழ் புனித தலங்கள் துாய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக நாடு முழுவதும் 10 தலங்கள் தேர்வு செய்யப்பட்டு மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. அதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் இடம் பெற்றுள்ளது. இக்கோயிலுக்கு நாள் தோறும் 50 ஆயிரம் பேரும், விழாக்காலங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரும் வருகின்றனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், முதியோருக்கான பேட்டரி கார், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வீல் சேர், சித்திரை வீதிகளில் பயோ டாய்லெட், நடமாடும் கழிப்பறைகள், குப்பைதொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொற்றாமரைக்குளம்: பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க, தக்கார் கருமுத்து கண்ணன் முயற்சி மேற்கொண்டார். இதற்காக சென்னை ஐ.ஐ.டி.,யின் பேராசிரியர் ரவீந்திரகிட் தலைமையில் குழுவினர், மீனாட்சி அம்மன் கோயிலில் 2010 ல் ஆய்வு மேற்கொண்டனர். சிமென்ட் கலவையால் பூசப்பட்டிருந்த பொற்றாமரைக் குளத்தின் தரைத்தளம் பெயர்த்து எடுக்கப்பட்டு, கண்மாயில் இருந்து எடுத்து வரப்பட்ட வண்டல் மண் பரப்பப்பட்டது. சோதனை அடிப்படையில் பொற்றாமரைக்குளத்தில் இரண்டு அடி மட்டத்துக்கு தண்ணீர் நிரப்பப்பட்டது. இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. பின் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் இருக்கிறது. அடுத்தகட்டமாக மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கும் முயற்சி நடக்கிறது.
சமர்ப்பணம்தக்கார் கருமுத்து கண்ணன் கூறியதாவது:இக்கோயில் துாய்மைப்பணி என்பது 12 ஆண்டு கால முயற்சி. முன்பு 12 பேர் மட்டும் இருந்தனர். தற்போது கோயில் சார்பில் 60 பணியாளர்களும், தனியார் சார்பில் 15 பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். துாய்மைப் பணிக்காக கோயில் சார்பில் ஆண்டு தோறும் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. துாய்மைப் பணிக்காக மாநகராட்சியிடம், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிதி வழங்கியுள்ளது. துாய்மைப்பணியை, இறைப்பணியாக கருதி மேற்கொள்ளும் ஒவ்வொரு துாய்மையாளரும் போற்றுதலுக்குரியவர்கள்; கடவுளுக்கு ஒப்பானவர்கள், என்றார்.