பதிவு செய்த நாள்
03
அக்
2017
11:10
கூடலுார்: கூடலுாரில் 17 ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஈஸ்வரன் கோயில் சிதிலமடைந்து வந்த நிலையில், கோயிலை சீரமைக்க ஊர் மக்கள் முடிவு செய்துள்ளனர். கூடலுார் தாமரைக்குளம் செல்லும் வழியில் பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயில் 17 ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின், கோயிலில் எவ்வித சீரமைப்புப் பணியும் நடைபெற வில்லை. இதனால், கோயில் கட்டடம் முழுவதும் சிதிலமடைந்து, இடியும் நிலையில் உள்ளது. 17 ம் நுாற்றாண்டில் இப்பகுதியில் ஆண்ட பூஞ்சையாத்து தம்பிரான் வாரிசு பேரனான ஸ்ரீஜித் வர்மா, கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பூஞ்சையாறு கிராமத்தில் உள்ளார்.
இவரை சந்தித்த கூடலுார் மக்களிடம், இக்கோயிலை புனரமைப்பு பணிகள் செய்து வணங்கினால், இப்பகுதி செழிப்படையும் என கூறியுள்ளார். இதனால், கூடலுாரில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் இணைந்து, கோயிலை சீரமைக்க முடிவு செய்துள்ளனர். இதன் முதற்கட்டமாக, கோயிலில் அன்னதான விழா நடத்தப்பட்டது. பூஞ்சையாற்று தம்பிரானின் மன்னர் வாரிசான பேரன் ஸ்ரீஜித் வர்மா, அன்னதானத்தை துவக்கி வைத்தார். இன்னும் சில தினங்களில் இக்கோயில் புனரமைப்பு பணிகள் துவங்க உள்ளன.