பதிவு செய்த நாள்
04
அக்
2017
12:10
மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரைக்கோவில் பகுதியில், ’ஆம்புலன்ஸ்’ வாகனம் செல்ல, தொல்லியல் துறை நிரந்தரமாக அனுமதிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.மாமல்லபுரத்தில், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, கடற்கரைக்கோவில், அதையொட்டிய கடற்கரையில் சுற்றுலாப் பயணியர் குவிகின்றனர்.
இறப்பு: இப்பகுதியில், கடலில் குளித்து, பலர் ஆபத்தில் சிக்குகின்றனர். அப்பகுதியினர் மீட்டாலும், ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல வழியின்றி, பலர் இறக்கின்றனர். கடற்கரை செல்லும் குறுகிய மணற்பாதையில், ஆம்புலன்ஸ் செல்ல இயலாது; வாகன நிறுத்துமிட பகுதி சாலையிலேயே நிறுத்தப்படும். ஆபத்தில் சிக்கியோர், இங்கு தான் கொண்டு வரப்பட வேண்டும். இதனால் தாமதமாகி, உயிரிழப்பு ஏற்படுகிறது.ஆபத்தின் போது, கடற்கரைக்கோவில் வளாக பகுதி வரை, ஆம்புலன்ஸ் செல்ல, பயணியை எளிதாக கொண்டு வர, நிரந்தரமாக மூடப்பட்டுள்ள நுழைவாயிலை திறக்க அனுமதித்தால் சிக்கல் தீரும்.சமீபத்தில், கடற்கரை பகுதியில், பெண் தவறி விழுந்து, கால் முறிவு ஏற்பட்ட நிலையில், அவரை சாலைக்கு பகுதிக்கு கொண்டு வர இயலவில்லை.
அனுமதி: போலீசார், தொல்லியல் துறையினரிடம் நிலைமையை விளக்கி, அனுமதிக்கப்பட்ட பிறகே, ’108’ ஆம்புலன்ஸ், கோவில் பகுதி கொண்டு செல்லப்பட்டு, அப்பகுதி பாதை திறக்கப்பட்டு, அப்பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.கடலில் சிக்கியோரையும், விரைவாக மருத்துவமனை கொண்டு செல்ல, கோவில் பகுதி வரை ஆம்புலன்சை அனுமதிக்க வேண்டியது அவசியம். தொல்லியல் துறை பரிசீலிக்க, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.