ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்துார் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பத்தை குப்பை கிடங்காக்கி வருவதால் கோயில் வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அங்கு குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்துார் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் பல நுாறு ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கோயிலாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை, புரட்டாசி, மார்கழி மாதங்களில் விழாக்கள் நடைபெறும். ஒவ்வொரு சனிக்கிழமையும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகிறது. கோயில் முன்புறம் தெப்பம் உள்ளது. மழைக்காலத்தில் கிடைக்கும் நீர் சில மாதங்கள் தெப்பத்தில் தேங்கி நிற்கும். சமீபத்திய மழையால் தெப்பத்தில் சிறிதளவு நீர் தேங்கி உள்ளது. கடந்த பல ஆண்டுக்கு முன்னர் வரையில் தெப்பத்தை புனிதமாக கருதி வந்த நிலையில் தற்போது குப்பை கொட்டும் இடமாக்கி வருகின்றனர். ஏற்கனவே தெப்பம் சிதிலமடைந்துள்ளது. அதனைச்சுற்றிலும் கால்நடைகளை கட்டி வைப்பதுடன் ஆக்கிரமிப்பும் செய்கின்றனர். கோயிலில் நடக்கும் விேஷச நிகழ்ச்சிக்குப்பின் சேரும் குப்பையை தெப்பத்தில் கொட்டி செல்கின்றனர். இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் கண்டு கொள்வதில்லை. புனித இடமாக விளங்கும் தெப்பத்தை சீரமைத்து, ஆண்டு முழுவதும் தண்ணீர் தேக்கவும், குப்பை கொட்டுபவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் மீது அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.