பதிவு செய்த நாள்
07
அக்
2017
11:10
குன்றத்துார்: மழைநீர் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், குன்றத்துார், மாங்காடு கோவில் குளங்கள், நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கின்றன. சில மாதங்களாக பெய்யும் கன மழையால், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்புகின்றன. ஆனால், குன்றத்துார் திருநாகேஸ்வரர் கோவில் குளம் மற்றும் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் குளம், தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. குன்றத்துார், மாங்காடு பகுதிகள் சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளதால், இப்பகுதியில் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக, மழைநீர் செல்லும் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
எஞ்சிய கால்வாய்களில் கழிவுநீர் கலந்திருப்பதால், அங்கு சேரும் நீரை , குளத்தில் விடமுடியாத நிலை உள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வடகிழக்கு பருவ மழை துவங்கயுள்ள நிலையில், குளத்தில் நீரை தேங்குவதற்கான நடவடிக்கையை குன்றத்துார் மற்றும் மாங்காடு பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். திருநாகேஸ்வரர் கோவில், நவகிரக ராகுதலமாக விளங்குகிறது. இங்குள்ள குளத்தில் நீராடியபின், இறைவனை வழிபட்டால், தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால், 15 ஆண்டுகளாக இந்த குளம் தண்ணீரின்றி உள்ளது. இதனால், பக்தர்கள் மன வேதனையடைகின்றனர். இதேபோல், பிரசித்தி பெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் குளத்திலும், 10 ஆண்டுகளாக தண்ணீர் இல்லை.