பழநி, பழநி முருகன் கோயில் இரண்டாம் ரோப்கார் அமைக்கும் முதற்கட்டமாக, பக்தர்கள் வசதிக்காக ரோப்கார் ஸ்டேஷனை விரிவாக்கம் செய்ய அளவிடும் பணிநடந்தது. தமிழகத்திலுள்ள மலைக்கோயில்களில் பழநிமுருகன்கோயிலில் மட்டும்தான் ரோப்கார் சேவை உள்ளது. இதன் மூலம் 3 நிமிடத்தில் எளிதில் மலைக்கு செல்லலாம். இதன்மூலம் ஆண்டுதோறும் ரூ.பலகோடி வருமானம் கிடைக்கிறது. சனி, ஞாயிறு, பொது விடுமுறை தினங்களில் குவியும் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து ரோப்காரில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் 2ம் ரோப்கார் வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் முதல் ரோப்கார் அருகே அமைய உள்ளது. இதனால் குவியும் பக்தர்கள் நெரிசலை தவிர்க்க ரோப்கார் டிக்கெட் கவுண்டர் வரிசை பகுதியை விரிவாக்கம் செய்ய முடிவுசெய்துள்ளனர். இதற்காக தற்போது உள்ள இடத்தை மாற்றம் செய்ய பொறியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், விரைவில் இரண்டாம் ரோப்கார் பணிகள் துவங்க உள்ளன. இதனால் மேலும் குவியும் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க ரோப்கார் ஸ்டேஷனில் மேல், கீழ்தளங்களில் விரிவாக்கம் செய்ய அளவிடும் பணி நடக்கிறது. ரோப்கார் ஆண்டு பராமரிப்பு பணியில் கோல்கட்டாவில் இருந்து ஷாப்ட் 2 நாட்களில் வந்தவுடன், அதனை பொருத்தி அடுத்தவாரம் ரோப்கார் இயக்கப்பட உள்ளது, என்றார்.