பழநி, கந்த சஷ்டி விழாவையொட்டி பழநி, திருச்செந்துார், திருப்பரங்குன்றம் ஆகிய 3 படைவீடுகளுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பாலக்காடு - திருச்செந்துார் பயணிகள் ரயில் பழநி, திண்டுக்கல், மதுரை வழியாக நாள்தோறும் இயக்கப்படுகிறது. பஸ் கட்டணத்தை விட மிகக்குறைந்த கட்டணம் என்பதால், தமிழக, கேரள பக்தர்களுக்கு பெரும் பயன் தருவதாக உள்ளது. இந்த ரயிலில் முருகனின் ஆறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம், பழநி, திருச்செந்துார் ஆகிய மூன்று கோயில்களுக்கு பக்தர்கள் அதிகளவில் செல்கின்றனர். இதனால் விடுமுறை நாட்களிலும் இடம் கிடைக்காமல் பயணிகள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் கந்தசஷ்டி விழா அக்.,20 முதல் 26 வரை முருகன்கோயில்களில் நடக்க உள்ளது. எனவே நெரிசலை தவிர்க்க பக்தர்கள் வசதிக்காக தீபாவளி முதல் கந்தசஷ்டி விழா வரை திருச்செந்துார்- மதுரை- - பழநி வரை சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என பக்தர்கள், பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.