பதிவு செய்த நாள்
12
அக்
2017
12:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, ஏரியில் நீர் நிரம்பியதால் மகிழ்ச்சி அடைந்த, இரு கிராம மக்கள், கிடா வெட்டி வழிபட்டனர். பின், கிராம மக்கள் அனைவருக்கும், பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில், சில நாட்களாக, பலத்த மழை பெய்து வருகிறது. இதில், போளூர் அடுத்த, பெரியகரம் கிராமத்தில், 306 ஏக்கரில் உள்ள பெரிய ஏரியில், நீர் நிரம்பி வழிகிறது. இதனால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏரி நிரம்பியதற்கு, கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை செய்தனர். பின், காளியம்மன், பொன்னியம்மனுக்கு பொங்கலிட்டனர். ஏரிக்கு சென்று வருணபகவானுக்கு கிடா வெட்டி படையலிட்டு வழிபட்டனர். பின், அந்த இறைச்சியை சமைத்து, கிராம மக்களுக்கு விருந்து வைத்தனர். இதேபோல், கண்ணமங்கலம் அடுத்த, புஷ்பகிரி பஞ்.,ல் உள்ள ஏரி நிரம்பியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள், மேள, தாளம், வாண வேடிக்கையுடன், ஊர்வலமாக ஏரிக்கரைக்கு சென்று, தண்ணீரில் மலர் துாவி வழிபட்டனர். பின், பொங்கல் வைத்து, கிடா வெட்டி பிரியாணி சமைத்து, கிராம மக்களுக்கு விருந்து வைத்தனர்.