பதிவு செய்த நாள்
13
அக்
2017
10:10
திருப்பூர்;ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ, திருப்பூரில் உள்ள ஒரு வீட்டில் பூத்தது.இமயமலை பகுதிகளில் மட்டும் காணப்படும், அரிய வகை பூவான, பிரம்ம கமலம் பூக்கள், பிரம்மாவுக்கு உகந்த பூவாக கருதப்படுகிறது. பூவில், பிரம்மா சயன கோலத்திலும், பாம்பு படம் எடுப்பது போலவும் காணப்படுகிறது.
பூ விரியும் போது, கமழும் நறுமணம், அனைவரையும் கவருவதாக உள்ளது.இரவு நேரத்தில் மட்டுமே மலரும், அரிய வகையான, பிரம்ம கமலம் பூக்கள், திருப்பூர், கே.செட்டிபாளையம், செல்வ லட்சுமி நகர், ஜெயசங்கர் - நயனேர் செல்வி வீட்டில், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு பூத்தது. இது குறித்து, நயனேர் செல்வி கூறுகையில்,""அரிய வகை பிரம்ம கமலம் பூக்கள் செடி, 10 ஆண்டாக உள்ளது. ஒன்று, இரண்டாக பூத்து வந்தது, கடந்த ஆண்டு ஏழு பூ பூத்தது. இந்தாண்டு, ஒன்பது பூக்கள் பூத்துள்ளது. இரவு, 8:30க்கு பூக்க துவங்கி, ஒரு சில மணி நேரத்தில் வாடியது. பூக்கள் மலரும் போது, இறைவனை பிரார்த்தனை செய்தால், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இதனால், அருகில் வசிக்கும் பலரும், இந்த பூக்களை பார்த்து, ஆச்சரியமடைந்து செல்கின்றனர்.