பதிவு செய்த நாள்
13
அக்
2017
03:10
தஞ்சாவூர்: அறுபடை வீடுகளில் நான்காம் வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் வரும் அக்.19ம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்க உள்ளது. தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த தலமாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் சிறப்புடையது,தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இவ்விழா வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இவ்விழாவின் தொடக்கமாக அன்றைய தினம் மாலை 7.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடைபெறுகிறது.
தொடர்ந்து 20ம் தேதி காலை சண்முகசுவாமி பரிவாரங்களுடன் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை காலை மாலை இருவேளையும் சுவாமி வீதிவுலாவும், 25ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி காலை 10 மணிக்கு 108 சங்காபிஷேகமும், மாலை 5 மணிக்கு சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்குதலும், 6 மணிக்கு சூரசம்ஹாரமும், பின்னர் தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்தல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. 26ம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் மாலை 7 மணிக்கு தேவசேனா திருக்கல்யாணமும், 27,28 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு ஊஞ்சல் திருவிழாவும், 30ம்தேதி சுவாமி மீண்டும் கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.