சபரிமலை: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கிறது. நாளை காலை புதிய மேல்சாந்தி தேர்வு நடக்கிறது. இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். பக்தர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்படும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகளை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தொடங்கி வைப்பார். உஷபூஜை, உச்சபூஜை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளுடன் மதியம் களபாபிஷேகம், சகஸ்ர கலசம் நடக்கும். எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடக்கும்.
நாளை காலை 8:00 மணிக்கு புதிய மேல்சாந்திக்கான குலுக்கல் தேர்வு நடக்கிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் நேர்முக தேர்வு நடத்தி தயாரிக்கப்பட்ட பட்டியலில் இருந்து ஒருவர், குலுக்கலில் தேர்வு செய்யப்படுவார். இவர் கார்த்திகை 1 முதல் ஒரு ஆண்டுக்கு மேல்சாந்தி பொறுப்புகளை கவனிப்பார். நாளை காலை சன்னிதானம் வரும் முதல்வர் பினராயி விஜயன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அக்.,21 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.