பதிவு செய்த நாள்
16
அக்
2017
10:10
காஞ்சிபுரம்: கைலாசநாதர் கோவிலில் உள்ள மணல் சிற்பங்கள் மீது, தண்ணீர் ஒட்டாதவாறு, ரசாயன கலவை பூசும் பணி நடக்கிறது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், 7ம் நுாற்றாண்டில், பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவிலில், மணல் கற்களால் செய்யப்பட்ட, அழகிய கலைநயமிக்க, 1,000க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. இக்கோவிலுக்கு, வெளியூர், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இக்கோவில் மதில் சுவரில் உள்ள சிற்பங்கள், மழையால் பாசி படிந்தும், துாசுகளால் மாசடைந்தும் காணப்பட்டன. தற்போது, சென்னை, துணை வேதியியல் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில், இவை சீரமைக்கப்படுகின்றன. இது குறித்து, இத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: மணல் சிற்பங்களின் மீது படிந்துள்ள பாசி மற்றும் கறைகளை சுத்தப்படுத்தி, சிதிலமடைந்த சிற்பங்களை பலப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. மேலும், சிற்பங்கள் மீது தண்ணீர் ஒட்டாதவாறு, ரசாயன கலவை பூசப்படும். இப்பணியில், 20 பேர் ஈடுபட்டுள்ளனர். ஒன்றரை மாதத்தில் பணி நிறைவுற்று, புதுப்பொலிவுடன் சிற்பங்கள் காட்சியளிக்கும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -