பதிவு செய்த நாள்
16
அக்
2017
11:10
சென்னை: அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் தேரோட்டம், வெகுவிமரிசையாக நேற்று நடைபெற்றது. சென்னை, மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி திருக்கோவிலில், ஆனி மற்றும் புரட்டாசி மாதங்களில் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு புரட்டாசி, 10 நாள் திருவிழா, 6ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று நடைபெற்றது. காலை, 6:00 மணிக்கு, பணிவிடை - உகபடிப்பு துவங்கியது. முற்பகல், 11:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யா வைகுண்ட தர்மபதி எழுந்தருளினார்.
சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், சிவ சிவ ஹர ஹர, அய்யா உண்டு என, பக்தி முழக்கத்துடன், வடம் பிடித்து இழுத்தனர். தேர் புறப்படுவதை குறிக்கும் வகையில், சங்கு முழக்கம், மாணவியர் நடனம், நாதஸ்வர கச்சேரி, செண்டை மேளங்கள் வாசிக்கப்பட்டன. திருத்தேர், மணலிபுதுநகர் பிரதான வீதிகளில் வலம் வந்து, மாலையில் தேர் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில், மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ., தமிழக தலைவர், தமிழிசை சவுந்தரராஜன், காங்., - எம்.எல்.ஏ., வசந்தகுமார், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு, வீதிதோறும் அன்ன தானம் வழங்கப்பட்டது. மாலையில், இந்திர விமான வாகனத்தில், அய்யா பதிவலம் வந்தார். இரவு, பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. இன்று அதிகாலை, 1:45 மணிக்கு, அய்யா பூம்பல்லாக்கு வாகனத்தில் பதிவலம் வருதல் நிகழ்வும் நடைபெற்றது. பிற்பகல், 2:30 மணிக்கு, திருக்கொடி அமர்தல் நிகழ்வுடன், விழா நிறைவுற்றது. - நமது நிருபர் -