பிச்சாண்டியாக ஓடேந்தி நிற்கும் விசுவநாதருக்கே அன்னமிட்ட தாய் அன்னபூரணி. அவள் கைராசி அது வரை ஈசன் கையில் ஒட்டியிருந்த பிரம்ம கபாலம் கையிலிருந்து நீங்கியது! எனவே சங்கரரும் அன்ன பூரணியின் பெருமையை அன்னபூர்ணாஷ்டகத்தில், “அன்ன பூர்ணே ஸதாபூர்ணே சங்கரப்ராண வல்லபே... என்று போற்றுகிறார்!
என்ன இது சர்வேஸ்வரனுக்கே பிச்சை எடுக்கும் நிலையா? இல்லை, இல்லை, சர்வேஸ்வரனுக்கே அன்னமிட்டும் அன்னை அகில உயிர்களுக்கும் அன்னம் வழங்குவதற்கு, ஆதாரமான சம்பவம், ஈஸ்வரியின் அன்னபூரணி திருக்கோலம் அகில் உலகத் தாய் அவளே என்பதாகும்!
குழந்தையாய் இருக்கும் போது பால், வளர்ந்த பிறகு அன்னம். அன்னக் கரைசலைக் கூட அன்னப் பால் என்போம். நோயுற்றவர்களுக்குத் தருவது, அன்னப்பால், பரிவுடன் ஞான சம்பந்தருக்குப் பாலூட்டிய தாய் அவள். காசிக்கு வரும் மானிடர்க்கெல்லாம் அன்னமளிப்பதற்கே அன்னபூரணியாய் அமர்ந்திருக்கிறாள்.