பதிவு செய்த நாள்
17
அக்
2017
03:10
தீபாவளிக்காக விதவிதமான சுவீட்ஸ் செய்ய தயாராகி வருவீர்கள். அதற்காக கோவா கச்சோடி, மைசூரு பர்பி, தூத் பேடா, பால்கேக், நட்டீஸ் சாக்லெட் மற்றும் ஜீரணமாக லேகியம் செய்யும் முறையும் இங்கு இடம் பெற்றுள்ளது.
கோவா கச்சோடி
தேவையான பொருட்கள்
கோவா – 200 கி
சர்க்கரை – 300 கி
மைதா – 300கி
ஏலப்பொடி – அரை டீஸ்பூன்
டால்டா –- 400 கி
செய்முறை: 100கிராம் சர்க்கரையை மாவாக்கிக் கொள்ளவும். மைதா மாவுடன் 75 கிராம் டால்டா சேர்த்து தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். கோவா, மாவு சர்க்கரை, ஏலப்பொடி இவைகளைக் கலந்து பூரணம் செய்து கொள்ளவும். மீதி சர்க்கரையைக் கம்பிப் பதத்தில் காய்ச்சி, ஜீரா தயாரிக்கவும். மைதா மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். மாவை செப்புப் போல் குழிவு செய்து பூரணத்தைச் சிறு நெல்லிக்காய் அளவு வைத்துப் பொருத்தி மூடி முனையை அழுத்திப் பூரணம் வெளியில் வராதபடி செய்து, டால்டா காய்ந்ததும் பொரித்து ஜீராவில் தோய்த்து எடுக்கவும்.
நட்டீஸ் சாக்லெட்
தேவையான பொருட்கள்
வறுத்த முந்திரி – 100 கி
பால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
கோக்கோ பொடி – மூன்று டீ ஸ்பூன்
பால்பவுடர், சர்க்கரை, கோக்கோ பொடியை தண்ணீருடன் கலந்து பிசைந்து கொள்ளவும். இந்தக் கலவையை தேவையான சைஸ் அளவுக்கு உருட்டி, அதற்குள் ஒரு முந்திரி ப்பருப்பை வைத்து மூடவும். நெய் தடவிய தட்டில் மூன்று மணிநேரம் காயவிடவும். பிறகு சாக்லெட் தாளால் சுற்றி வைத்தால் சாக்லெட் ரெடியாகி விடும்.
பால்கேக்
ஐந்து நிமிடத்தில் செய்து முடிக்கப் படுவதால் பைவ் மினிட் பால்கேக் என்று பெயர். ஒரு கப் சர்க்கரையில் நீர் சேர்த்து சூடாக்கி கம்பிப்பதத்துக்கு பாகாக்கிக் கொள்ளுங்கள். ஒரு கப் மைதாவை ஒரு டேபிள் ஸ்பூன் டால்டாவில் வறுக்கவும். சர்க்கரைப் பாகில், வறுத்த மைதா, ஒரு கப் பால் பவுடர், சிறிது ஏலப் பொடி, இரண்டு டீ ஸ்பூன் நெய் போட்டு, உருண்டு, திரண்டு வரும் வரை வாணலிச் சூட்டிலேயே வைத்துக் கிளறவும். நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி, கத்தியால் சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். அருமையான பால் கேக் ரெடி, இங்கே சொல்லியுள்ள அளவுக்கு 30 பீஸ் வரை கிடைக்கும்.
மைசூரு பர்பி
தேவையான பொருட்கள்
பால் – கால் லிட்டர்
தேங்காய்த் துருவல் – 250 கி
சர்க்கரை – 300 கி
முந்திரிப் பருப்பு –100 கி
நெய் – 2டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி – - அரை டீஸ்பூன்
செய்முறை: தேங்காய்த் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் சிறிது பாலைத் தெளித்து வெண்ணெய் போல் அரைத்துப் பாலில் கலக்கவும். இந்த கலவையில், சர்க்கரை சேர்த்து வாணலியில் விட்டு, அடுப்பில் வைத்து வாணலியின் அடிபாகத்தில் பிடிக்காமல் பக்குவமாக கிளறவும். நெய், ஏலப்பொடி சேர்க்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் பூத்து வரும் போது, அடுப்பிலிருந்து இறக்கி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டிச்
சூடு ஆறிய பின் துண்டுகளாக செய்ய வேண்டும்.
தூத் பேடா
தேவையான பொருட்கள்
பால் – 3/4 லிட்டர்
இடித்த சர்க்கரை – 200 கிராம்
ஏலக்காய் – -4
நெய் – 1 டீஸ்பூன்
பிஸ்தா – 5 கிராம்
செய்முறை:
ஏலக்காயைத் தூள் செய்யவும். அடிகெட்டியான களிம்பேறாத பாத்திரத்தில் பாலை விட்டு அடுப்பில் வைத்துக் கெட்டியாக வரும் வரை கிளறவும். அதில் சர்க்கரை, நெய், ஏலப்பொடி சேர்த்துக் கிளறி 10 நிமிடம் கழித்து இறக்கவும். பிறகு ஒரு தட்டில் கொட்டிப் பிசைந்து சிறு நெல்லிக்காயளவு உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்துச் சற்று அமுக்கி விட்டு வைக்கவும். அதன் மீது சீவிய பிஸ்தாவை ஒட்ட வைக்கவும்.