பதிவு செய்த நாள்
17
அக்
2017
03:10
இந்த உலகம் பணத்தின் மீது மட்டும் தான் பாசம் வைத்திருக்கிறது. பணத்தின் மீது பாசம் வைப்பது இவ்வுலகை பொறுத்தவரை இன்பமாகத் தெரியும். ஆனால், மறுமை நாளில் இந்த பணத்தாசை நரகத்தில் தள்ளிவிடும். நபிகள் நாயகம் இதுபற்றி கூறும் போது, “மறுமை நாளில் இறைவன் முன்னிலையில் மனிதன் கொண்டு வரப்படும் போது, பலவீனம், அவமானம் காரணமாக அவன் ஆட்டுக்குட்டியை போன்ற நிலையில் இருப்பான். பிறகு இறைவன் பக்கத்தில் இருந்து, நான் உனக்கு செல்வத்தை அள்ளித்தந்து உனக்கு பல பேருதவிகளை செய்தேனே. அவற்றில் நீ எவ்வாறு செயல் புரிந்தாய்? என்று கேள்வி கேட்கப்படும்.
அதற்கு அவன், இறைவா! நான் செல்வத்தை அதிகமாக திரட்டி, அதனைப் பன்மடங்காக பெருக்கி, அதை உலகத்திலேயே விட்டு வந்து விட்டேன். என்னை மீண்டும் உலகத்திற்கு அனுப்பினால், அவை அனைத்தையும் என்னுடன் எடுத்துக் கொண்டு வந்து விடுவேன் என்று கூறுவான். சரி... நீ மறுமைக்காக என்ன அனுப்பி வைத்தாய்? அதைக்காட்டு,” என்று அடுத்தகேள்வி கேட்கப்படும். அதற்கும் அவன் முந்தைய பதிலையே கூறுவான். இவ்வாறு சொல்பவன் நரகத்தில் தள்ளப்படுவான்,” என்கிறார். இதன் பொருள் என்ன? பூமியில் வாழும்போது, இறைவனின் கேள்விக்கு வெறும் பணத்தை மட்டும் சேர்த்தேன் என்று சொல்லும் மனிதன், நீ சொர்க்கத்தில் வாழ்வதற்காக இங்கே என்ன அனுப்பி வைத்தாய் எனக்கேட்டால், அப்போதும் பணத்தை பற்றியே பேசுகிறான். பணத்தை தவிர அவனுக்கு வேறு சிந்தனையே இல்லை. சொர்க்கத்தில் வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், பூமியில் இறைவனால் கொடுக்கப்பட்ட பணத்தையும், பிற வசதிகளையும் கொண்டு மற்றவருக்கு நன்மை செய்திருக்க வேண்டும்.
யாருக்காவது ஒருவேளை உணவு, ஒரு ஏழை மாணவனுக்கு ஒரு நோட்டு புத்தகம், ரமலான் நோன்பின் போது, ஒரு டம்ளர் தண்ணீராவது பிறருக்கு தானமாகக் கொடுத்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் போனால், அவன் நரகத்தில் தள்ளப்படுவான்.