● காலையில் எழுந்தவுடன் உலகம் முழுவதையும் நினைத்து வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என வாழ்த்த, அந்த அலைகள் மனித சமுதாயத்தின் அறிவில் பதிவாகி, உலகம் முழுமைக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். ● எல்லா பேறுகளையும், உங்களுடைய வாழ்க்கையிலே பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என பிறரை வாழ்க வளமுடன் என்று வாழ்த்துவது உயர்ந்த பலனை அளிக்கும். ஒரு மரத்தையும், செடியையும் கூட வாழ்த்தி மகிழலாம். அவ்வாறு வாழ்த்தும் போது, அவற்றின் பலவீனம் நீங்கி நன்றாக வளரும். ● அன்பு, அருள், இன்முகம், களை இவற்றோடு கூடிய உருவப் படங்களை வீட்டில் வையுங்கள். இதனால், அமைதியும் இன்பமும் நிலவும். குழந்தைகளும் நல்லவர்களாக, அழகு மிக்கவர்களாக திகழ்வர். ● தனிமனிதன் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தால், உலகம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். ● நற்செயலில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் மனநிறைவே மகிழ்ச்சி. ● கடமை தவறாதவர்களால் மட்டுமே கடவுள் மீது பக்தி செலுத்த முடியும். ● தேவையான சூழ்நிலையில் கோபம் கொண்டது போல நடிக்கலாம். ஆனால் மனதிற்குள் அமைதி நிலவ வேண்டும். - வாழ்த்துகிறார் வேதாத்ரி மகரிஷி