பதிவு செய்த நாள்
17
அக்
2017
03:10
சங்ககிரி: பழமை வாய்ந்த, வைகுந்தம் லட்சுமிநாராயணன் கோவிலை புதுப்பிக்க மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியம், வைகுந்தம் அக்ரஹாரத்தில், 500 ஆண்டுகளுக்கு முன், கட்டப்பட்ட பழமை வாய்ந்த லட்சுமி நாராணயன் கோவில் உள்ளது. கோவிலில், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கற்பகிரகம் ஆகியவை கற்துாண்களால் ஆனவை. கோபுரம் மற்றும் கோவிலை சுற்றிலும் சிறிய செங்கற்களால், சுண்ணாம்பு, மணல் கலவையை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
கற்பகிரகத்தில், லட்சுமிநாராயணன், வெளிப்புறத்தில் மூன்று நாகர்சிலை, நம்மாழ்வார், ராமானுஜர் சிலைகள் உள்ளன. கோபுரம் சிதலிமடைந்து, 30 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், மரம், செடி, கொடிகள் முளைத்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள், பயந்தபடியே சுவாமியை தரிசனம் செய்கின்றனர். கோவில் வளாகத்தையொட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளதால், அதன் அருகில் மாணவர்கள் சென்று வருவதால் விபத்து அபாயம் உள்ளது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கோவிலை புதுப்பிக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவில் பூசாரி, கிருஷ்ணன் ஐயர், 59, கூறியதாவது: லட்சுமி நாராயணன் சுவாமி கோவில், கற்துாண்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கோபுரம் சிதலமடைந்து வருவதால், அழியும் நிலை உள்ளது. இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து சீரமைத்தால், பழமையை கட்டிக்காக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் விஸ்வநாதன் கூறியதாவது: பழமை வாய்ந்த கோவில் என்பதால், தொல்லியல் துறையினருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். துறையினர் பார்வையிட்டு, பணி குறித்து தெரிவிக்கும் பட்சத்தில், மதிப்பீட்டை தயார் செய்து, பணி தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.