பதிவு செய்த நாள்
20
அக்
2017
10:10
லக்னோ: தீபாவளியையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சரயு நதி ஆரத்தி விழாவில், 1.87 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு, புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தீபாவளியன்று மாலை, அயோத்தியில் உள்ள சரயு நதி ஆரத்தி விழாவில், அமைச்சர்கள் புடைசூழ, முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்; நிகழ்ச்சியில், அம்மாநில கவர்னர், ராம் நாயக்கும் பங்கேற்றார். ராமன், சீதை, லட்சுமணன் வேடமணிந்தவர்களுக்கு, முதல்வர் யோகி மற்றும் கவர்னர், மாலை அணிவித்து, திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின், ராமகதா பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் உரையாற்றினார். ஆரத்தி விழாவுக்காக, சரயு நதிக்கரை முழுவதும், 14 ஆயிரம் லிட்டர் எண்ணெய் மூலம், 1.87 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன. தீபமேற்றும் விழாவில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். விழாவின் போது, மிகப் பெரிய விளக்கும் ஏற்றப்பட்டது. இந்த தீபமேற்றும் விழா, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டதாக, அறிவிக்கப்பட்டது. இதற்கு முன், 2016ல், பாபா ராம் ரஹீம் பெயரில் பதிவான உலக சாதனை நிகழ்ச்சியில், 1.50 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.