மயிலாடுதுறையில் துலா உற்சவ தீர்த்தவாரி: பக்தர்கள் புனிதநீராடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2017 12:10
மயிலாடுதுறை:- மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி (துலா) மாத அமாவாசை தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.
சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் பிரம்மவனம் (மயிலாடுதுறை). அங்கு சிவபெருமானும் மயில் உரு கொண்டு இருவரும் ஆனந்த நடனம், மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில், தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்ம தீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப் பாயாக என்று அசரிரி கூறியது. அதைக் கேட்ட பார்வதி தேவி மனமகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்தாள். மயில் உருநீங்கி தேவியாக சுய உருப்பெற்றாள். சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரிமாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வர வே ண்டும்.நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டினாள் என்பது ஐதீகம். இதனை நினைவுக்கூறும் வகையில் ஐப்பசி1ம் தேதி தீர்த்தவாரியுடன் துலா உற்சவம் தொடங்கி அமாவாசை தீர்த்தவாரியும், ஐப்பசி 30ம் தேதி துலா உற்சவம் (கடைமுக தீர்த்தவாரி) சிறப்பாக நடப்பது வழக்கம்.
துலா மாத பிறப்பு தீர்த்தவாரி விழா நேற்று தொடங்கியது. ஐப்பசி 2ம் நாளான அமாவாசை தீர்த்தவாரி விழா நடைபெற்றது. அதனையொட்டி முன்னிட்டு அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் சுவாமி, வாதானேஸ்வரர் சுவாமி ஆகியவை பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் காவேரி துலாக்கட்டத்தில் எழுந்தருளனர். ஐப்பசிமாத அமாவாசையொட்டி வள்ளலார் கோயிலில் இருந்து கங்கை அம்மன் சமேத மாதாதட்சிணாமூர்த்தி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காவிரிக்கரைக்கு எழுந்தருளினார். அங்கு தருமபுரம் ஆதீனம் இளையசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் சுவாமிகள் குருபகவானுக்கு பட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து காவிரியின் இரு கரையிலும் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சுவாமி தீர்த்தம் கொடுக்க தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் உட்பட திரளான பக்தர்கள் துலாக்கட்ட காவிரியில் புனிதநீராடினர். மேதா தட்சிணாமூர்த்தி சுவாமி ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி(துலா) மாத அமாவாசை அன்று ஒரு நாள் மட்டும் வீதியுலாவாக காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெ றுவது குறிப்பிடத்தக்கது.