பதிவு செய்த நாள்
20
அக்
2017
12:10
திருநெல்வேலி: நெல்லையில் கல்லிலே கலைவண்ணம் கண்ட கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்கள் பராமரிப்பின்றி சிதைந்து வருகின்றன. அறநிலையத்துறையினர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலி – -திருச்செந்துார் சாலையில் 12 கி.மீ.,தொலைவில் உள்ளது கிருஷ்ணாபுரம். 16ம் நுாற்றாண்டில் குமார கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் 1564 முதல் 1572களில் கட்டப்பட்டது வெங்கடாசலபதி கோயில். திருப்பதி கோயிலில் மேற்கொள்ள வேண்டிய நேர்த்திகடன்களை அங்கு செல்லமுடியாதவர்கள் இங்கு செலுத்துகிறார்கள். இக்கோயிலில் மார்கழி பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றதாகும். கோயிலை கட்டிய மன்னர் பெயரிலேயே ‘கிருஷ்ணாபுரம்’ என அழைக்கப்படுகிறது.
42 சிலைகள்: 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் வெளிமண்டபம், உற்சவ மண்டபம், உள்மண்டபம், சுவாமி சன்னதி என உள்ளது. உற்சவ, உள் மண்டபங்களில் அமைந்துள்ள 42 சிலைகள் ஒவ்வொன்றும் பிரமாண்டத்தின் உச்சமாக உள்ளன. உற்சவர் மண்டபத்தின் முன்னுள்ள அர்ஜுனர் சிலை, குறத்தி ராஜகுமாரனைத் தூக்கிச் செல்லுதல், நாடோடிப் பெண்ணின் நடனம், கர்ணன் சிலை, குறவன் அரசகுமாரியைத் துாக்கிச் செல்லுதல், தேவகன்னியின் நடனம் ஆகிய ஆறு கல்துாண் சிலைகள் பிரமிப்பூட்டு வனவாகும். சிலைகளின் முகத்தின் தெரியும் புன்னகையோ, கோபமோ, உடலில் நரம்புகள் புடைக்கும் சிற்பநுணுக்கங்களை பார்த்து பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. உள் மண்டபத்திலுள்ள வீரபத்திரன், மன்மதன், பீமன் ஆகிய சிற்பங்கள் உள்ள கல் துாண்கள், நடனமாது, ரதிதேவி ஆகிய சிற்பங்கள் நாயக்கர் காலச் சிற்பிகளின் கைவண்ணத்தை பறை சாற்றுகின்றன. யானைக்கும், காளைக்கும் ஒரே முகம் இருக்கும் படியாகச் சிற்பம் செதுக்கப்பட்டிருப்பது விநோதமாக உள்ளது. கிருஷ்ணாபுரத்துச் சிற்பங்கள் நமது அரிய கலைச் செல்வங்களாகும்.
சிதைபடும் சிலைகள்: முன்னாள் பிரதமர் ராஜிவ் இக்கோயிலுக்கு வந்து சென்று பிறகுதான் மத்திய, மாநில அரசுகள் இக்கோயிலை கண்டுகொண்டன. ஆனாலும் கூட இன்றளவும் அரியவகை சிற்பங்கள் பாதுகாக்கப்படாமல் கைகளால் தொடும் துாரத்தில் உள்ளன. இதனால் கற்களை கொண்டு சிலையின் இசையை கேட்கிறோம் என கூறி அதனை உடைத்து விட்டனர். குறிப்பாக மன்மதன் சிலையின் கரும்பு வில் உடைந்துவிட்டது. கரும்பு வில்லின் மேல்பகுதியில் உள்ள துவாரத்தில் ஒரு குண்டூசியை போட்டால் கீழே அடிப்பாகத்திற்கு தானாக வந்துவிடும் அளவுக்கு வில்லை நுட்பமாக வடிவமைத்திருந்தனர். இவ்வாறு பல்வேறு சிலைகளிலும் அவற்றின் முழு உருவத்தை சிதைத்து வருகின்றனர்.
பாதுகாப்பு அவசியம்: சிலைகளை பாதுகாக்க சுற்றிலும் கண்ணாடி கூண்டுகள் அமைத்து பாதுகாக்க தமிழக இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என தொல்லியல் ஆர்வலர்களின் விரும்புகின்றனர். இங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விளக்கி கூற பணியாளரகள் இல்லை. இந்த கோயிலுக்கென தனி அதிகாரி இல்லாமல்,திருச்செந்துார் முருகன் கோயில் இணை ஆணையர்தான், கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார். எனவே இக்கோயிலுக்கென தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்.