பதிவு செய்த நாள்
20
அக்
2017
04:10
பழநி: பழநி மலைக்கோவிலில், காப்புகட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது.பழநி கோவிலில், அக்.,20ம்தேதி முதல், 25ம்தேதி வரை, கந்தசஷ்டி விழா நடக்கிறது. இதையடுத்து, பகல், 12:00 மணிக்கு, உச்சிகால வேளையில், மூலவர் ஞானதண்டாயுதபாணி, உற்சவர் சின்னக்குமாரசுவாமி, சண்முகர், நவவீரர்களுக்கு காப்புகட்டுதல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, காப்பு கட்டி விரதம் துவங்கினர். அலங்காரத்தில் சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கந்தசஷ்டி விழாவிற்காக, கோயில் யானை ‘கஸ்தூரி யானைப்பாதை வழியாக மலைக்கோயில் சென்றது. அங்கு ஆறு நாட்கள் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது. ஆண்டு முழுவதும் பெரியநாயகியம்மன் கோயிலில் உள்ள யானை கஸ்தூரி, கந்த சஷ்டி விழாவிற்கு மட்டுமே, மலைக்கோயிலுக்கு அழைத்து செல்லப்படுகிறது. யானைப் பாதை வழியாக மலையேறிய கஸ்தூரி, பத்மாசூரனை சின்னக்குமாரசுவாமி வதம் செய்யும் வரை, மலைக்கோயிலில் ஆறுநாட்கள் தங்கி, பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளது.