பதிவு செய்த நாள்
21
அக்
2017
10:10
திருப்பரங்குன்றம்;’திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நேற்று (அக்.,20) துவங்கியது. காலை 8:30 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்ஞை விநாயகர் முன்பு யாக பூஜைகளைத் தொடர்ந்து மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகைக்கு பூஜைகள் முடிந்து, விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தன.
சுவாமிக்கு காப்புக் கட்டுதல்: முதலில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும், அடுத்து ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும் காப்புக் கட்டப்பட்டது. திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டப்பட்டு, விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் காப்புக் கட்டினர். காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள் திருவிழா நடக்கும் ஆறு நாட்களிலும் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். உச்சிகால பூஜை முடிந்தபின்பு அவர்களுக்கு தேன்,சர்க்கரை கலந்த தினை மாவும், பாலும், எலுமிச்சம் பழச்சாறும் கோயில் சார்பில் வழங்கப்படும்.
சூரசம்ஹாரம்: தினமும் இரவு 7:00 மணிக்கு தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் சென்று அருள்பாலிப்பார். தினமும் காலை 8:30 மணிக்கு யாகசாலை பூஜைகளும், காலை 11:00, மாலை 5:00 மணிக்கு சண்முகார்ச்சனை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அக்.,24ல் கோயில் பணியாளர்கள் திருக்கண்ணில் வேல் வாங்குதல், அக்.,25ல்சூரசம்ஹாரம், அக்.,26 காலையில் சுவாமி, தெய்வானை அம்மன் சட்டத்தேரில் எழுந்தருளி ரத வீதிகள், கிரிவீதியில் தேரோட்டம், மதியம் 3:00 மணிக்கு மூலவர் முன் தயிர்சாதம் படைக்கப்பட்டு பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும். திருவிழா நடைபெறும் அக்.,26 வரை தங்கரதம் புறப்பாடு இல்லை.