பதிவு செய்த நாள்
21
அக்
2017
10:10
திருத்தணி : முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று துவங்கியது. காலை முதல் இரவு வரை சண்முகப்பெருமானுக்கு நடந்த லட்சார்ச்சனையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் தீபாவளி முடிந்து இரண்டாவது நாளில் கந்தசஷ்டி விழா துவங்கி, ஏழு நாட்கள் நடப்பது வழக்கம். இதையொட்டி, சண்முகப்பெருமானுக்கு, காவடி மண்டபத்தில் லட்சார்ச்சனை விழா மற்றும் சிறப்பு அலங்காரம் நடக்கிறது. நடப்பாண்டிற்கான கந்தசஷ்டி விழா, நேற்று காலை, யாக சாலை பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு காவடி மண்டபத்தில், உற்சவர் சண்முகப்பெருமானுக்கு லட்சார்ச்சனை துவங்கி, இரவு, 8:00 மணி வரை நடந்தது.
முதல் நாள் விழாவில், காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இன்று, பட்டு அலங்காரம், நாளை மற்றும் 23ல், தங்க கவசம் சாத்தப்படுகிறது. தொடர்ந்து, 24ம் தேதி, திருவாபரணம், 25ல், வெள்ளி கவசம் மற்றும் சந்தனக் காப்பு போன்ற அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை காட்டப்படுகிறது. அன்று மாலை, 5:00 மணிக்கு சண்முகப் பெருமானுக்கு, புஷ்பாஞ்சலியும், 26ம் தேதி காலை, 11:00 மணிக்கு, திருக்கல்யாணத்துடன் சஷ்டி விழா நிறைவு பெறுகிறது. கந்தசஷ்டி முடியும் வரை, மலைக்கோவிலில் உள்ள மண்டபத்தில், திருத்தணி முருகன் திருவடி சபை சார்பில், பக்தி இன்னிசை கச்சேரி, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
முதல் நாள் நிகழ்ச்சியில், அரக்கோணம் எம்.பி., அரி, திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன், கோவில் தக்கார், ஜெய்சங்கர், இணை ஆணையர், சிவாஜி உட்பட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, முருகப்பெருமானை தரிசித்தனர். இதே போல், முருகன் துணை கோவிலான திருத்தணி நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள ஸ்ரீகோட்ட ஆறுமுக சுவாமி கோவிலி லும், நேற்று கந்த சஷ்டி விழா துவங்கியது. காலை, 8:00 மணிக்கு மூலவருக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இன்று மூலவருக்கு பட்டு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.