பதிவு செய்த நாள்
21
அக்
2017
10:10
துாத்துக்குடி:திருச்செந்துார் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா, யாகசாலை பூஜையுடன் நேற்று துவங்கியது. ஏராளமான பக்தர்கள், கோவில் கிரி பிரகாரத்தில் அங்கப் பிரதட்சணம் செய்து, விரதம் துவக்கினர். முருகப்பெருமானின், அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு, திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா, நேற்று கோலாகலமாக துவங்கியது. காலை, 7:00 மணிக்கு, யாகசாலை பூஜையும், மதியம், 12:00 மணிக்கு மூலவருக்கு உச்சிகால தீபாராதனையும் நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, சண்முக விலாச மண்டபம் வந்து சேர்ந்தார். மாலை, 4:30 மணிக்கு சஷ்டி மண்டபத்தில், ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் நடந்தது. பின், தங்க தேரில் எழுந்தருளி, கிரி பிரகாரம் வலம் வந்தனர். கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, அதிகாலை முதல் பக்தர்கள் கடலிலும், நாழி கிணற்றிலும் புனித நீராடினர். கிரி பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து, விரதம் துவக்கினர். 25ல், சூரசம்ஹார விழாவும், மறுநாள் திருக்கல்யாணமும் நடக்கிறது.
நான்காம் படைவீட்டில்: முருகக் கடவுளின், ஆறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாக, கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலையில், நேற்று காலை சண்முக சுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோவிலிலிருந்து படி இறங்கி, உற்சவ மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 21ம் தேதி முதல், 24ம் தேதி வரை காலை, மாலை இருவேளையும் சுவாமி வீதிவுலாவும், 25ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடக்கின்றன. இதையொட்டி காலை, 10:00 மணிக்கு, 108 சங்காபிஷேகமும், மாலை, 5:00 மணிக்கு, சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்குதலும், 6:00 மணிக்கு சூரசம்ஹாரமும், பின், தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்தல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.