பதிவு செய்த நாள்
21
அக்
2017
11:10
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழா, கொடியேற்றத்துடன் நேற்று, கோலாகலமாக துவங்கியது. காஞ்சிபுரம் குமரகோட்டம், சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை, 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன், கந்த சஷ்டி விழா துவங்கியது. பின், பல்லக்கு உற்சவம் நடந்தது. இரவு, ஆடு வாகன உற்சவம் நடந்தது. ஆறுமுகப்பெருமான் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கோவில் பிரகாரத்தை, 108 முறை சுற்றி வழிபட்டனர். வரும், 25ம் தேதி வரை, தினமும் சண்முகப்பெருமானுக்கு லட்சார்ச்சனையும், மாலை, 6:00 மணிக்கு, குமரன் கலையரங்கில், கந்தபுராண சொற்பொழிவும் நடைபெறுகிறது.
பெரிய காஞ்சிபுரம் நெமந்தகாரத்தெரு பழநி ஆண்டவர் கோவிலில், காலை, அபிஷேகம், ஆராதனையும், வீரவாகு காப்பு கட்டுதல் நடந்தது. இரவு, சுவாமி வீதியுலா வந்தார். அஷ்டபுஜம், வீரண்ணன் - குமார் செட்டி தெரு, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மூலவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நேற்று காலை, 7:30 மணிக்கு, கோவில் வட்ட மண்டபத்தில், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன், உற்சவர் கந்தசுவாமி பெருமான் எழுந்தருளினார்.தொடர்ந்து, கொடி மரம், கொடி உள்ளிட்ட வைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களின் அரோகரா... கோஷம் விண்ணை பிளக்க, கோவில் சிவாச்சாரியார்களால், 8:30 மணிக்கு உற்சவ கொடிஏற்றப்பட்டது.கொடியேற்றம் நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்.பி., மரகதம் குமரவேல், கோவில் செயல் அலுவலர் நற்சோணை மற்றும் ஏராளமான பக்தர்களும், உள்ளூர் வாசிகளும் பங்கேற்று, கந்தபெருமானை வழிபட்டனர். தொடர்ந்து, ஆறு நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில், 25ம் தேதி மாலை, 5:30 மணிக்கு முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் விழா நடைபெறுகிறது.
உத்திரமேரூர்: உத்திரமேரூர் பாலசுப்ரமணியசுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி, நேற்று காலை, கொடியேற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து, 10 நாட்களுக்கு, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லக்கோட்டை ஊராட்சியில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு கந்த சஷ்டி விழா நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. உற்சவர் மலர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இதை தொடர்ந்து 25ம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதேப்போல், குன்றத்துார் மலை குன்றின் மீது அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், சஷ்டி விழா துவங்கியது. - நமது நிருபர் குழு -