பதிவு செய்த நாள்
21
அக்
2017
11:10
விருதுநகர்: விஞ்ஞான காலத்தில் வெடி வைத்து பாறைகளை தகர்த்து கிணறு வெட்டலாம், இதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டால் பல நுாறு அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கலாம். இவற்றிற்கும் மழைநீர் தான் ஒரு வகையில் ஆதாரமாக உள்ளது. மழை பெய்யாவிட்டால் கிணற்றில் கூட தண்ணீர் கிடைக்காது. பல நுாறு அடி ஆழத்தில் அமைத்த ஆழ்துளை கிணறிலும் தண்ணீர் இருக்காது. இந்த பரிதாப நிலையை தான் தற்போது விருதுநகர் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகள் சந்திக்கின்றன. கோடையில் தான் குடிநீர் தட்டுப்பாடு என்றில்லாமல் நிரந்தரமாகவே மையம் கொண்டுள்ளது எனலாம். இதற்காக தாமிரபரணி, வைகை என மற்ற மாவட்ட ஆறுகளில் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஊழல் ஆட்சி: மாவட்டத்தில் அரசு துறையில் ஆயிரம் இன்ஜினியர்கள் இருந்தாலும் தன்னிறைவு என்பது இல்லை. குடிநீர் உட்பட மற்ற அடிப்படை வசதிகளுக்கு மற்றொரு அமைப்பை நம்பியே வாழும் நிலை உள்ளது. முன்பு தன்னிறைவு பெற்ற கிராமங்கள் பல இருந்தன. கிராமத்திற்கு தேவையான வருமானம், அங்குள்ள மண், நீர், தொழில் மூலம் பெற்று அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தனர். இதற்கு சரியான திட்டமிடல், எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை போன்றவை கணக்கிடப்பட்டு பணிகள் நடந்தன. தற்போது இதுபோன்ற மெச்சும் பணிகள் எதுவும் நடக்கவில்லை. உள்ளாட்சி அமைப்புகளோ ஊழலாட்சி அமைப்புகளாக மாறி வருகின்றன.
மழைநீர் சேகரிப்பு, சரியான திட்டமிடல், மக்களுக்கு பகிர்ந்தளிப்பது போன்றவற்றை விருதுநகர் தெப்பம் இன்றும் நமக்கு உணர்த்துகிறது. இங்கு 1860 க்கு முன்பு நன்கு திட்டமிட்டு, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தெப்பம் அமைத்துள்ளனர். பேராலியில் இருந்து மழைநீர் தெப்பத்திற்கு கொண்டு வரப்பட்டு சேமிப்பும் நடந்துள்ளது. இதன் பின் 1966ல் கவுசிகாநதியில் இருந்த தண்ணீர் தெப்பத்திற்கு வருமாறு அமைப்புகளை ஏற்படுத்தினர். இதன் பயனாக தெப்பத்தை சுற்றிய பகுதிகளில் இன்றும் நிலத்தடி நீர் மட்டம் குறையாது சுவையான குடிநீரும் கிடைத்து வருகிறது.
விஷமிகளால் பாழ்: மழைநீர் சேகரிப்பு முன்னோடியான இந்த தெப்பத்தை இந்து நாடார்கள் அபிவிருத்தி பலசரக்குக்கடை மகமை சார்பில் துார்வாரி, சுத்தம் செய்யும் பணி கடந்த இரு மாதமாக நடந்து வருகிறது. தெப்பத்தை ஒரு குப்பை தொட்டி போல் சில விஷமிகள் பயன்படுத்தி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மழைநீரை அரும்பாடுபட்டு தெப்பத்தில் சேகரித்து அதை மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்திய விருதுநகர் நல் உள்ளங்களின் மனதை நோகடித்துள்ளனர். மழை நீர் சேமிப்பு என்பது நமது சந்ததியினருக்குதானே என்பதை அனைவரும் புரிய வேண்டும். புரிதல் இல்லாமல் கழிவுகளை கொட்டியிருப்பதை பார்க்கும் போது நமது கண்கள் கலங்குகின்றன.இனியாவது தெப்பத்தில் கழிவுகளை கொட்டாது ஒரு புண்ணிய தீர்த்தமாக பார்ப்போமே...
வருது கண்காணிப்பு கேமரா: தெப்பமானது 13 ஆண்டுக்கு முன் துார்வாரப்பட்டபோது தண்ணீர் வெளியேற்ற எவ்வித சிரமமும் ஏற்படவில்லை. இம் முறை துார்வாரியபோது, மனதில் ஒரு இறுக்கம் ஏற்பட்டது. டயர், தேங்காய் சிரட்டை, வீட்டு கழிவுகள், குப்பை, காபி கடை கண்ணாடி கிளாஸ், மது பாட்டில்கள், கண்ணாடிகள், ஆடை, கயிறுகள் என சிக்கியதால் துார்வாரிய இயந்திரம் நின்றது. இதை தெப்பத்தில் இறங்கி அகற்றியபோது உடைந்த கண்ணாடிகள் தொழிலாளர்கள் கால்களை பதம் பார்த்தது. அரை டன் உடைந்த கண்ணாடிகளை வண்டியில் ஏற்றினோம். இது தவிர மற்ற பொருள்களையும் அகற்றினோம். மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததே காரணம் என எண்ணி, கிடைத்த கழிவுப்பொருட்களை மக்கள் பார்வைக்கு வைத்து, அதில் பஞ்ச் டயலாக் வாசகங்கள் எழுதி, எங்கள் ஆதங்கத்தை போக்கினோம். நம் முன்னோர்கள் மழைநீரை அருமையான முறையில் சேமித்து, அதன் மூலம் வறட்சி இல்லாமல் வளமான வாழ்ந்துள்ளனர் என்பதற்கு இந்த தெப்பமே எடுத்துக்காட்டாக உள்ளது. இதை உணராமல் பாழாக்கினால் எப்படி விழிப்புணர்வு ஏற்படும். இனி ,தெப்பத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு மாசு படுத்துபவர்கள் மீது போலீஸ் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்.
– சுதர்சன்,மகமை செயலாளர்,விருதுநகர்.
தெய்வக்குற்றத்துக்கு ஆளாவர்: விருதுநகர் மாரியம்மன், வெயிலுகந்தம்மன் கோயில் பொங்கல்விழாவின்போது இந்த தெப்பக்குளம் தண்ணீரை தான் பெண்பக்தர்கள் பலிபீடத்தில் ஊற்றுகின்றனர். காளியம்மன்கோயில் உட்பட பல கோயில்களுக்கு புனிதநீர் இங்கு இருந்து தான் எடுத்து செல்கின்றனர். இந்த தெப்பத்தை அசுத்தப்படுத்தினால் தெய்வக்குற்றத்தை மக்கள் சந்திக்க வேண்டியதிருக்கும். தெப்பத்தை சுற்றிலும் நிழல் தரும் மரங்கள் உள்ளன. இதில் முதியவர்கள் இளைப்பாரிவிட்டு செல்கின்றனர். மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு போன்றவை நடப்பதால் எந்த வெயில் காலத்திலும் இங்கு குளுமை குடிகொண்டிருக்கும். இதை உணராதவர்களே தெப்பத்தில் குப்பையை கொட்டுகின்றனர்.
– சந்தன மகாலிங்கம் ,விருதுநகர்
குப்பை கழிவால் வேதனை: தெப்பக் குளத்தில் சொக்கர், பிரியாவிடை அம்மன் கோயில் உள்ளது. சுற்றிலும் ஞானதண்டாயுதபாணி, விநாயகர், சனீஸ்வரன், காச்சாரம்மன் கோயில்கள் உள்ளன. இந்த தெப்பத்தை சுற்றி குடிநீர் குழாய் அமைத்து சப்ளை நடக்கிறது. இன்றும் நீரின் சுவை அருமையாக இருக்கும். தெப்பத்தை சுற்றி உள்ள மக்கள் இதை தான் குடிநீராக பயன்படுத்துகின்றனர். தெப்பம் நிரம்பினால் வால்வு மூலம் சங்கிலிகருப்பசாமி கோயில் தெருவில் உள்ள கிணறில் சேகரமாகும் அமைப்பு உள்ளது. மேலும் மாங்காமச்சி பள்ளி, முனிசிபல் கிணறு உட்பட ஆறு கிணறுகளுக்கு தண்ணீர் செல்லும் அமைப்பும் உள்ளது. தற்போது தெப்பத்தில் குப்பை கொட்டுகின்றனர். பகலில் கொட்டினால் தட்டிக்கேட்பார்கள் என்பதால் இரவில் வீசிவிட்டு செல்கின்றனர். இது தவிர கழிப்புகள் போன்றவற்றையும் கொட்டிவிட்டு செல்கின்றனர். குடிநீர் கிடைக்காமல் திணறும் மக்களுக்கு ஒரு தெப்பத்தை பராமரிக்கும், பாதுகாக்கும் எண்ணம் இல்லை என்பது வேதனையான விஷயமே.
– ரவி ,விருதுநகர்
நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்: பேராலி ரோடு, கவுசிகா நதியில் இருந்து பம்ப் செய்து தெப்பத்திற்கு தண்ணீர் வரும் அமைப்பு உள்ளது. இதற்காக நிலமும் வாங்கப்பட்டு நவீன முறையில் பம்ப் செய்யப்படுகிறது. இதற்காக தெப்பத்தில் இருபுறமும் பெரியவடிகுழாய் உள்ளது. தெப்பத்தை சுற்றி காம்பவுண்டு சுவர் உள்ளது இன்றும் கம்பீரமாக உள்ளது. தெப்பத்தில் மனிதர்கள் இறங்கி அசுத்தப்படுத்தாமல் இருக்க இதை சுற்றி இரும்புகம்பியால் ஒரு கோடி ரூபாயில் வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. முன்னோர் முயற்சியால் ஒரு வரப்பிரசாதமாக விருதுநகர் மக்களுக்கு தெப்பம் அமைந்துள்ளதை புரியாமல் மக்கள் குப்பை கொட்டுகின்றனர்.இதை தவிர்க்கவேண்டும். இதற்கான மாற்றமும் மக்கள் மனநிலையில் வரவேண்டும். – யோகராஜன் ,விருதுநகர்.