பதிவு செய்த நாள்
21
அக்
2017
11:10
சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று, யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, நேற்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு, காலை, 7:30 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து, உற்சவ மூர்த்திகளை, 1,320 படிக்கட்டுகள் வழியாக, முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு யாக சாலையில் விநயாகர் வழிபாடு, யாக பூஜைகள் ?ஹாமங்கள் பூர்ணாகுதி நடந்தது. இதை தொடர்ந்து பால், தயிர், நெய், பன்னீர், தேன், சந்தனம் உட்பட, 108 வகையான திரவியங்களுடன் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அபி?ஷகம், சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. பிறகு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா நடக்கும் ஆறு நாட்களும், விரதத்தை தொடங்கும் விதமாக, பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர். கந்த சஷ்டி விழா, 25ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி தினமும் காலை, 9:30 மணி முதல், பகல், 12:00 மணி வரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கும். பக்தர்கள் வசதிக்காக, விழா நடக்கும் நாட்களில், அடிவாரத்தில் இருந்து, மலை கோவிலுக்கு செல்ல, பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 25ம் தேதி மாலை, 5:00 மணிக்கு மேல் மலை கோவிலில் இருந்து, படிக்கட்டுகள் வழியாக, உற்சவ மூர்த்திகள், அடிவாரத்துக்கு கொண்டு வரப்படும். அதைத்தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு மேல், நான்கு ராஜ வீதிகளிலும், சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கும். மறுநாள் (26ம் தேதி) திருக்கல்யாண வைபோகம் நடக்கும்.
* ஈரோட்டில், திண்டல், கருங்கல்பாளையம் சுப்ரமணியர், வெண்டிபாளையம் மயூர்பிரியர் முருகன் கோவில் உள்ளிட்ட முருகன் சன்னதிகள் அனைத்திலும், கந்த சஷ்டி, சூரசம்ஹார விழா நேற்று தொடங்கியது. திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மயூர் பிரியர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி, சஷ்டி விரதம் தொடங்கினர்.
* கோபி பச்சமலை, பவளமலை முருகன் கோவிலில், சூரசம்ஹார விழா கோலாகலமாக துவங்கியது. வேத மந்திரம் முழங்க, பக்தர்கள் சஷ்டி விரத காப்பு காட்டி கொண்டனர். பச்சமலை முருகன், சுப்பிரமணியர் அலங்காரத்தில் கோவிலை வலம் வந்தார். பின் யாகசாலை பூஜை, பகல், 12:00 மணிக்கு சண்முகர் அர்ச்சனை நடந்தது. பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், அபி?ஷகம், தீபாராதனை, யாகசாலை பூஜை நடந்தது. சஷ்டி விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.