பதிவு செய்த நாள்
23
அக்
2017
10:10
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், மூன்றாம் நாள் கந்தசஷ்டி விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பொது வழியில், இரண்டு மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா, 20ம் தேதி, யாக சாலை பூஜையுடன் துவங்கியது.மூன்றாம் நாளான நேற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 5:00 மணிக்கு நடந்தது. காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு தங்க கவச அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை, 8:00 மணி முதல், காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு லட்சார்ச்சனை, இரவு, 8:00 மணி வரை நடந்தது.
நேற்று நடந்த விழாவில், முருகன் மலைக்கோவிலுக்கு, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, பொதுவழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.இன்று, காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு திருவாபரணஅலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. நாளை, வெள்ளிகவசம், 25ம் தேதி, சந்தனக் காப்பு போன்ற அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடக்கிறது. அன்று, மாலை, 5:00 மணிக்கு, சண்முகப் பெருமானுக்கு, புஷ்பாஞ்சலியும், 26ம் தேதி காலை, 11:00 மணிக்கு, உற்சவருக்கு, திருக்கல்யாணத்துடன் சஷ்டி விழா நிறைவு பெறுகிறது. தினமும் மலைக்கோவிலில் உள்ள மண்டபத்தில், திருத்தணி முருகன் திருவடி சபை சார்பில், பக்தி இன்னிசை கச்சேரி, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பரத நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதே போல், திருத்தணி நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலிலும், கந்த சஷ்டி விழாவையொட்டி, மூலவருக்கு தினமும். காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.