பதிவு செய்த நாள்
23
அக்
2017
11:10
திருக்கழுக்குன்றம் : கந்தசஷ்டி விரதம் துவங்கியுள்ள நிலையில், சபரிமலை சீசன் மாலைகள் விற்பனையுடன் நீல, காவி, கருப்பு நிற வேட்டி, துண்டு விற்பனையும் திருக்கழுக்குன்றத்தில் களை கட்டியது. திருக்கழுக்குன்றத்தில், புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள சங்கு தீர்த்த குளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறப்பதுடன், குரு பகவான் கன்னி ராசிக்கு வரும்போது, புஷ்கர மேளாவும் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விரதம் நேற்று துவங்கியுள்ள நிலையில், சபரி மலைக்கு மாலை அணிவோர், தாழக்கோவில் பக்தவச்சலேஸ்வரர் சன்னதியில் பூஜை செய்து அணிந்து கொள்கின்றனர். இதனால், இப்பகுதி கடைகளில் ஸ்படிகம், துளசி உள்ளிட்ட மாலைகள் தொங்க விடப்பட்டுள்ளன. இவற்றின் விற்பனை கார்த்திகை பிறப்பிற்கு முன்னதாகவே சூடுபிடித்துள்ளது. அது போல, பச்சை, கறுப்பு, காவி, நீல நிற வேட்டி துண்டுகளும் ஜவுளி கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.